ஒரே இடத்தில் 108 திவ்யதேசம் - திருச்சியில் விழாக்கோலம் - பக்தர்கள் பக்தி பரவசம்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக, ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாள் தரிசன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, பெருமாளை தரிசனம் செய்து, பக்தி பரவசம் அடைந்து வருகின்றனர்.
108 வைணவ திருத்தலங்களை குறிக்கும் 108 திவ்ய தேசங்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், மங்களாசாசனம் செய்யப்பட்டதுமாகும். இதில் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாள நாட்டிலும் இருக்கிறது. மற்ற இரண்டு வானுலகில் இருப்பதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், 27 திவ்ய தேசம் சயன கோலம், 21 அமர்ந்த திருக்கோலம், 60 திவ்ய தேசம் நின்ற திருக்கோலத்திலும் பெருமாள் காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேச பெருமாள்கள்
பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும், தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில், திருச்சியில் முதன் முறையாக ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் தரிசனம்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நிலையம் அருகில் வாசவி மஹாலில் 108 திவ்யதேச பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரு சேர தரிசித்து, அதன் பின்னர் திருப்பதி பெருமாள் போல, மிகப் பிரம்மாண்டமான திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் எழுந்தருள செய்து, தீபாராதனை நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து தரிசித்து வருகின்றனர்.
ஆன்மீக நிகழ்ச்சிகள்
ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாள்களின் தரிசனம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தரிசன நிகழ்ச்சியையொட்டி தினமும் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள், சான்றோர்களின் சங்கீர்த்தன உபன்யாசம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 6.30 மணிக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண வைபவம்
திருச்சி மாநகரில் 10 நாட்கள் நடைபெறும் 108 வைணவ திருக்கோயில்கள் பெருமாள் தரிசனம், வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 9-ந்தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் பரவசம்
எல்லோராலும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று வழிபடுவது என்பது இயலாத காரியம், அதேநேரம் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் 108 திவ்யதேச பெருமாளையும் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவரும் 10 முதல் 20 பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இருக்கும் பட்சத்தில், 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளையும் ஒரே நேரத்தில் மன நிறைவுடன் தரிசித்தது பெரும் பாக்கியத்தை அளித்து இருப்பதாகவும் பக்தர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.