காவேரி ஆத்து பக்கம் விளையாட போன என் மகனை.. கதறி அழும் ஏழை தந்தை!
11-வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளான்.
திருச்சி: "காவேரி ஆத்து பக்கம் விளையாட போன என் மகனை நான் அந்த கோலத்திலா பாக்கணும் என்று கதறி அழுகிறார் ஏழை தந்தை ஒருவர்!!
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது 10 வயது மகன்தான் ஆகாஷ். அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 வகுப்பு படித்து வந்தான்.
எப்போதுமே லீவு நாட்களில் அந்த பகுதி மாணவர்களுடன் ஆகாஷ் காவேரி ஆற்று பகுதியில் விளையாடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் அப்படித்தான் ஆகாஷை அந்த பகுதி மாணவர்கள் 6 பேர், ஆற்றில் மீன்பிடிக்க அழைத்து வந்திருக்கிறார்கள்.
அப்பவே வந்துட்டான்
காலையில் டீ குடித்துவிட்டு விளையாட சென்ற ஆகாஷ் மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. ஆனால் மற்ற மாணவர்கள் மதிய சாப்பாட்டுக்கு அவரவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் அவர்களிடம் சென்று"உங்களுடன்தானே ஆகாஷ் விளையாட வந்தான்? எங்கே" என்று கேட்க அவன் "அப்பவே வந்துவிட்டானே" என்று சொல்லி சமாளித்து மழுப்பி இருக்கிறார்கள்.
மூழ்கி விட்டான்
திரும்ப திரும்ப கேட்டும் எந்த பதிலையுமே அவர்கள் சொல்லவில்லை. சாயங்காலம்வரை சுரேஷ் அந்த மாணவர்களின் காலில் விழுந்து அழுது கேட்டுக் கொண்டே இருந்தார். இதற்குள் சுரேஷின் உறவினர்கள் எல்லாரும் திரண்டு வந்து விடவும் விவகாரம் பெரிதானது. மாணவரில் ஒருவரை மிரட்டி கேட்ட பிறகு, "தண்ணிக்குள் குளிக்க போனான், மூழ்கிவிட்டான்" என்று பதில் வந்தது.
குழப்பினார்கள்
இதையடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் எல்லோரும் சேர்ந்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி தேட ஆரம்பித்தார்கள். ஆனால் எந்த இடத்தில் ஆகாஷ் குளிக்க போனான் என்று யாருமே தெளிவாக சொல்லவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை சொல்லியே அனைவரையும் குழப்பியதாக தெரிகிறது,
தந்தை சுரேஷ் பேட்டி
மறுநாள்தான் மணல் மேடு உள்ள பகுதியில் இருந்த புதரின் ஒரு ஓரத்தில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுவன் எப்படி இறந்தான் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் என் மகனை கொலை செய்து விட்டார்கள் என்று சுரேஷ் குற்றஞ்சாட்டுகிறார். ஒன் இந்தியா தமிழ் சார்பாக இது குறித்து சுரேஷிடம் கேட்டோம்.
கேள்வி: உங்கள் மகனுக்கு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்?
காலையில டீ குடிச்சிட்டு இருந்தான். அப்போ தான் மீன் பிடிக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க. மொத்தம் 6 பேர். அதுல 2 பேர் காலேஜ் படிக்கிற பிள்ளைங்க. மத்தவங்க எல்லாரும் சின்ன பசங்க. கபடி விளையாடும்போது ஆகாஷை தூக்கி தூக்கி போட்டு விளையாடி இருக்காங்க. இதனால் அவனுக்கு தலைசுற்றல் வந்திருக்கும் போல. அதனால மயங்கி கீழே விழுந்திருக்கிறான். ஆனா இதை பார்த்த மற்ற பசங்க, ஆகாஷ் செத்து போனதா நினச்சிக்கிட்டு, யாருக்கும் தெரியாமல் அங்க இருக்க ஒரு மணல் மேட்டு புதரில் மறைத்து வெச்சிட்டு வந்துட்டு இருக்காங்க.
நான் போய் கேட்டதுக்கு தெரியவே தெரியாதுன்னு சொல்லி சமாளிச்சிட்டாங்க. புதர்ல மறைச்சு வைக்கும்போது என் பையனுக்கு உசுரு இருந்தது. அப்பவே சொல்லி இருந்தா, புள்ளைய காப்பாத்தி இருப்போம். எங்களை ஒரு நாள் முழுக்க அலைக்கழிச்சு மறுநாள் போய் பார்த்தப்போ உசுரு போய்ட்டு இருந்தது. எம் புள்ளைய அவங்கதான் கொன்னுட்டாங்க"
கேள்வி: எதை வைத்து உங்கள் பையன் கொலை செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள்?
தண்ணிக்குள்ள மூழ்கிட்டான்னு பசங்க சொன்னாங்க. ஆனா உடம்பு மணல் மேட்டுல இருக்கு. உதடு வீங்கியிருந்தது. காதுல ரத்தம் வழிஞ்சு கிடந்தது. தண்ணியில மூழ்கி இருந்தா உடம்பு கொஞ்சமாவது ஊறி இருக்குமே. ஆனா என் புள்ள எப்படி போனானோ அப்படியேதான் இருந்தான். மணல் மேட்டுல அவன் உடம்பை கண்டுபிடிச்சு எடுத்ததே தீயணைப்பு துறைதான்.
கேள்வி: இது சம்பந்தமா போலீசில் புகார் தந்திருக்கீங்களா?
இந்த கொலை வழக்கு எங்க கிராமத்து ஸ்டேஷனில் வராதாம். ஆத்துக்கு அந்த பக்கமாக உள்ள கிராம போலீசார்தான் இதை விசாரிச்சிட்டு வர்றாங்க. ஆனா நியாயமா கேஸ் நடக்கல. விளையாட போன எல்லாருமே பெரிய இடத்து பிள்ளைங்க. 2 பேர் காலேஜ் படிக்கிறவங்களா இருந்தாலும் எல்லாரையுமே மைனரா காட்டி, இந்த கேஸ் முடிக்க பாக்குறாங்க. அந்த 6 பேருமே இப்போ கிராமத்துலயே இல்லை. அப்பறம் எப்படி விசாரணை நடக்கும்? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கேட்டால் 2 மாசம் ஆகும்னு சொல்றாங்க." என்று கதறி அழுகிறார் சுரேஷ்.