வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கும் தமிழக விவசாயிகள்.. அய்யாகண்ணு அதிரடி அறிவிப்பு
திருச்சி: வாரணாசி லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழகத்தில் இருந்து 111 விவசாயிகள் போட்டியிட உள்ளதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.
திருச்சியில் இன்று நிருபர்களிடம் அய்யாகண்ணு கூறியதாவது:
பல்வேறு விவசாயிகள் சார்ந்த கோரிக்கைகளுக்காக, டெல்லியில் நாங்கள், 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். விவசாயிகள் சங்கங்கள் திரண்டு பேரணி நடத்தினோம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
எனவே, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தில் இருந்து 111 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நாடு முழுவதும் மக்களும், விவசாயிகள் சங்கங்களும் ஆதரவு வழங்க தயாராக உள்ளனர் என்றார்.
ஆட்சி காலம் முடிவடைந்துள்ள நிலையிலும், எதற்காக மோடிக்கு எதிராக போட்டியிட முடிவு செய்துள்ளீர்கள் என்ற நிருபர்கள் கேள்விக்கு, இன்னும் பாஜகதான் ஆளும் கட்சி. மோடிதான் பிரதமராக பதவியில் உள்ளார். எனவே போட்டியிடுகிறோம் என்றார்.
வேட்புமனுத்தாக்கலுக்காக 300 விவசாயிகள் வாரணாசிக்கு ரயில் டிக்கெட் எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.