பன்றிகளை வேடிக்கை பார்க்க வந்த 12 வயது சிறுவன்.. அண்ணன் தம்பி பகையில்... பலியான பரிதாபம்!
12 வயது சிறுவனை அடித்து கொன்ற 4 பேர் கைதாகி உள்ளனர்.
திருச்சி: பன்றிகளை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் அவன்.. ஆனால், அண்ணன் - தம்பி பகையில், இந்த 12 வயது சிறுவனை அடித்து கொன்று குப்பை கிடங்கில் புதைத்தே விட்டனர்.. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சி, அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் அலியார்.. இவரது மகனுக்கு 12 வயதாகிறது.. 6 -ம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். ஆனால் இவன் கொஞ்ச நாளாகவே ஸ்கூலுக்கு போகவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், போன 3-ம் தேதி சாயங்காலம் வீட்டில் இருந்து வெளியே போன சிறுவன் திரும்பவும் வரவே இல்லை.. இதனால் பயந்துபோன பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்து, கடைசியில் 6-ம் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் தந்தனர். அதனடிப்படையில் போலீசாரும் சிறுவனை தேடியும், விசாரித்தும் வந்தனர்.
கயல்விழி
அப்போதுதான், முத்துக்குமார் என்பவரின் பெயர் அடிபட்டது.. அதே பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சேகர். இவரது மனைவி கயல்விழி. இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்களது மகன்தான் முத்துக்குமார்.. 26 வயதாகிறது.. இவர் பன்றிகள் வளர்த்து வந்துள்ளார்.. அந்த பன்றிகளுக்கு பண்ணைகளும் உள்ளன.. இந்த பன்றிகளை பார்க்க சிறுவன் அங்கு வருவானாம்.. அதனால்தான் அவர்களுக்கு சிறுவன் மீது கோபம் இருந்துள்ளது தெரியவந்தது.
வாக்குமூலம்
இந்த தகவலின் அடிப்படையில் முத்துக்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சொன்னதாவது: "என் அண்ணன் அதாவது பெரியப்பா மகன், சிலம்பரசன் எங்களுடைய பன்றியை அடிக்கடி பிடித்து விற்று வந்தான். அவனுக்கு சிறுவன் உதவி செய்வதாக சொல்லப்பட்டது. அதாவது எங்களுடைய பன்றிகள் எங்கே நிற்கின்றன, எத்தனை நின்கின்றன என்பதை வேவு பார்த்து சொல்வதாக எனக்கு சிலர் சொன்னார்கள்.
குப்பை கிடங்கு
அதனால், அந்த பையன் இனி பன்றிகளை வேவு பார்க்க வந்தால் கட்டி போடுங்கள் என்று எங்கள் ஆட்களிடம் சொல்லி இருந்தேன். போன 3-ம் தேதி சாயங்காலம் சிறுவன் அதேபோல பன்றிகள் இருக்கும் பகுதிக்கு வந்தான்.. அவனை என் நண்பர்கள் கட்டி வைத்து சரமாரியாக உதைத்தனர்.. அதில் அவன் இறந்துவிட்டான். அவன் உடலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் போடுங்கள் என்று நான்தான் சொன்னேன்.
தண்ணீர் தொட்டி
அவர்களும் குப்பை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், சிறுவனின் உடலை கல்லை கட்டி போட்டு, அதில் குப்பைகளை போட்டு மூடி புதைத்து விட்டனர்" என்றார். இதையடுத்துதான் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.. கொலை செய்து 6 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், உடல் அழுகிய நிலையில் இருந்தது.. அதனால் அங்கேயே போஸ்ட்மார்ட்டமும் செய்யப்பட்டது.
அதிர்ச்சி
பன்றி வளர்ப்பு தொடர்பாக அண்ணன் - தம்பியான சிலம்பரசனுக்கும், முத்துகுமாருக்கும் நடந்த பகையில் அப்பாவி சிறுவன் பலியாகிவிட்டான்.. இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது. இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், கொலையாளிகள் 16 வயது முதல் 19 வயதுடையவர்கள் என்பதுதான்.. இந்த சம்பவம் திருச்சி மக்களை உறைய வைத்துள்ளது.