திருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 14 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாமில் தமிழகத்தின் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 54 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த 14 பேரும் அடங்குவர். இவர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் முறைகேடாக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஜூன் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வங்க தேசத்தினர் 14 பேர் சொந்த நாட்டுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்படி முகாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 பேர் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் ஹவுரா விரைவு ரயிலில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டர். பின்னர் அங்கிருந்து வங்கதேச எல்லையில் அந்த நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி திருச்சி மத்திய சிறை கைதிகள் 57 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.