கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல
Recommended Video
திருச்சி: கொடுமை.. இது மிகவும் கொடுமை.. கண்முன்னாலேயே தன்னுடைய குழந்தை படிப்படியாக பூமியின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருப்பதை பார்க்க கூடிய மிகப்பெரும் கொடுமை ஆரோக்கியதாஸ் மற்றும் மேரி தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது.
2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை விழுந்தபோது, 26 அடி ஆழத்தில் தான் இருந்தார். அவரை எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது.
ஏனெனில் ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமரா, குழந்தையின் உருவத்தை படம்பிடித்தது. ஆக்சிஜன் அனுப்புவதும், எளிதாக இருந்தது. அவ்வளவு ஏன்? குழந்தை அழுவது கூட வெளியே கேட்டது. குழந்தையின் தாய் பேசியதற்கு குழந்தை 'உம்' என்று பதிலும் சொன்னது.
சுஜித்தை மீட்க வருகிறது 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓன்ஜிசியின் அதி நவீன ரிக் மிஷின்!
சுறுசுறுப்பான சுஜித்
சுறுசுறுப்பு, துடுக்கு மற்றும் துறுதுறுப்பு கொண்ட குழந்தையாம் சுஜித். அவர் உறவினர்கள் சொல்கிறார்கள். எனவே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி கொண்டிருந்தாலும் கூட தைரியமாகவே காணப்பட்டது அந்த குழந்தை. ஆரம்பத்தில் எல்லாம் தைரியத்தோடு தான் குழந்தை பதில் சொன்னது. ஆனால் நீண்ட நேரமாக ஈரமான மணலுக்குள் இருந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவு உண்ணாததாலும் போகப்போக குழந்தையின் குரலில் நடுக்கம் தென்பட்டது. இது தவிர குழந்தை ஓரளவுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது என்று நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.
திடீரென பின்னடைவு
ஆனால் இன்று அதிகாலை மீட்பு பணிகளில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இவ்வாறு சுஜித் சென்றபோது அவரது தலைக்கு மேல் ஆள்துளை கிணற்றில் இருந்த மணல் விழுந்துவிட்டது. அதுவரை சிறுவன் கையை அசைத்து அதை கேமராவில் பார்த்து வந்த அதிகாரிகளால் அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.
100 அடி ஆழம்
சுஜித் அழுகுரலும் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் அருகாமையில் நடக்கக்கூடிய பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சுஜித் மேலும் கீழே சென்று கொண்டே இருக்கிறார். இரவு 7 மணி அளவில் கிடைத்த தகவல்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டார். இப்போது அவர், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
கண் முன்னாடியே
மணல் மேலே மூடியிருப்பதால் குழந்தையை கேமராவாலும் படம்பிடிக்க முடியவில்லை, கையை அசைத்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த குழந்தை படிப்படியாக இப்படி அத்தனை பேர் கண் முன்னாலும் அடி ஆழத்துக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை?
அதிருப்தி
இத்தனை தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் இந்த இரண்டு வயது குழந்தையை தங்கள் கண் முன்னாடியே இப்படி அடுத்தடுத்து ஆழத்திற்குச் செல்ல அனுமதித்து கொண்டிருக்கும் நமது சமூகத்தின் மீது நமக்கு கோபம் வரத்தான் செய்கிறது. சமூக வலைத்தளங்களில் அதன் வெளிப்பாட்டை பார்க்க முடிகிறது.