அலைக்கடலென கூடிய மக்கள்.. தந்தையின் சவப்பெட்டியை தொட்டு வணங்கிய சிவச்சந்திரனின் 2 வயது மகன்
Recommended Video
திருச்சி: அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு வந்த சிவச்சந்திரனின் சவப்பெட்டியை அவரது குழந்தை தொட்டு வணங்கிய காட்சி நெஞ்சை உலுக்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த 2500 வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
திருச்சி விமான நிலையம்
40 பேரில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரனும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீரமரணமடைந்தனர். இவர்களின் உடல் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இருவரது உடல்களும் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பள்ளி மாணவர்கள்
பின்னர் சிவச்சந்திரனின் உடல் அரியலூர் மாவட்டம் கார்குடிக்கும் சுப்பிரமணியத்தின் உடல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவலப்பேரிக்கும் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி
சிவச்சந்திரனின் உடல் வருவதற்கு முன்பே அவரது வீட்டின் முன் ஏராளமானோர் கூடினர். வாழ்க கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் அவரது உடல் வந்தவுடன் மனைவி, தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என அஞ்சலி செலுத்தினர்.
கண் கலங்க வைத்தது
அப்போது தந்தையின் உடலுக்கு 2 வயது மகன் தனது பிஞ்சு கைகளால் தொட்டு வணங்கியது காண்போரை கண் கலங்க வைத்தது. பின்னர் அக்குழந்தை தனது தந்தைக்கு இறுதி சடங்குகளையும் செய்தது பார்ப்போரை நெஞ்சடைக்க செய்தது.