85 அடியிலிருந்து 100 அடிக்கு போய் விட்ட சுஜித்.. மீட்பு பணிகள் தீவிரம்.. நம்பிக்கையில் மக்கள்!
ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
Recommended Video
திருச்சி: 24 மணி நேரத்தை கடந்த சென்று வரும் நிலையில், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. 85 அடியில் இருந்த குழந்தை சுஜித் இப்போது 100 அடியில் விழுந்துவிட்டான்.. தேசிய பேரிடர் குழுவின் நடவடிக்கையை தொடர்ந்து சுரங்கம் போன்று குழி தோண்டி குழந்தையை எடுக்க என்எல்எசி குழு இறங்கி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆரோக்கிய தாஸ் - மேரி. இவர்களின் 2 வயது ஆண் குழந்தை சுஜித் வின்சென்ட்.
இந்நிலையில் ஆழ்துளை கிணறு ஒன்று பயன்பாட்டுக்கு வழிஇன்றி மேலே மூடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மழை பெய்ததால், மேலே மூடப்பட்டிருந்த மணல் அகன்றுவிட்டது.
அந்த சமயத்தில் அதாவது 5.40 மணியளவில் சுஜித், அந்த பக்கமாக சென்றபோது, இந்த குழியை பார்க்காமல் உள்ளே தவறி விழுந்துவிட்டான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதன்பிறகுதான் ஆழ்துளையின் ஆழம் சுமார் 22 அடி என்று தெரியவந்தது. மருத்துவ மீட்பு குழு மூலம் முதல் வேலையாக ட்டியூப் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. பின்னர், கிணற்றுக்கு பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியை தோண்டி அதன் வழியாக குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அதிர்வு ஏற்பட்டதால், திடீரென மளமளவென மணல் கிணற்றுக்குள் விழ ஆரம்பித்தது. இதனால் அந்த முயற்சிஅப்படியே கைவிடப்பட்டுவிட்டது.
மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க, ஆக்சிஜன் செலுத்தினாலும், கிணற்றுக்குள் இருள் சூழந்து இருக்கும். அதனால் குழந்தை பயந்துவிடக்கூடாது என்பதற்காக கிணற்றுக்குள், வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. இதைதவிர கிணற்றுக்குள் கேமராவையும் அனுப்பி பார்த்ததில், குழந்தை உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. இதன்பிறகு, குழந்தையின் பெற்றோரை கூப்பிட்டு, ஸ்பீக்கலில் அதிகாரிகள் பேச வைத்தனர்.
மீட்பு பணி தொடர்ந்து கொண்டே இருந்தால், கூடுதல் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அதேபோல, மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட எஸ்பியும் வந்தனர். இவர்களை அடுத்து, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோரும் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நள்ளிரவையும் தாண்டி கண்காணித்தபடியே இருந்தனர்.
இதன்பிறகு மதுரையில் இருந்து, ரோபோ அறிவியலாளர் மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மீட்பு நிபுணர் டேனியல் ஆகியோரும், ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்று, தாங்கள் வைத்துள்ள கருவிகள் மூலமாக, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரவு 1.45 மணிக்கு குழந்தை பேச கஷ்டப்பட்டான். எனினும் யாரும் பயப்பட வேண்டாம் என்று மருத்துவ குழுவினர் நம்பிக்கை தெரிவித்து கொண்டே இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், ஏற்கனவே விழுந்த இடத்திலிருந்து மேலும் கூடுதலாக 6 அடி ஆழத்துக்கு குழந்தை கீழே சென்றுவிட்டான். அதாவது, 27அடியில் இருந்தவன் 68 அடிக்கு சென்றுவிட்டதால், மொத்த குழுவினருமே பதட்டமாகி விட்டனர். எனினும் அதுக்கும் கீழே குழந்தை போக வாய்ப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள்.
நீண்ட நேரமாகியும் குழந்தை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி நாடப்பட்டு, அவர்களும் விரைந்தனர். 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கருவிகளுடன் மீட்பு படையினர் மணப்பாறைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புப் படையும் மீட்பு பணி நடவடிக்கையில் இறங்கி உள்ளதால், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி மிக தீவிரமாக நடக்கிறது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை இணைந்து குழந்தையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குழந்தையை வெளியே கொண்டு வரும் அதிநவீன கருவிகள் உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுவிடுவான் என்ற நம்பிக்கை தகவல் கிடைத்தது.
உறிஞ்சி எடுக்கும் புதிய முறையை தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. பல வழிகளில் முயன்றும் அது பலன் தராமல் போனதால் தற்போது சிறுவனை அப்படியே சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறையில் மேலே தூக்கும் முயற்சிகளை செய்தனர்.
சக்ஷன் முறையில் எப்படி சுஜித்தை மீட்பார்கள்?
தேசிய பேரிடர் தங்களுடன் கொண்டு வந்திருந்த நவீன கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கினர். குழந்தையின் தலையில் உள்ள மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொரு பக்கம் முயற்சி மேற்கொள்கின்றனர். அதாவது கிணறுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அருகிலேயே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை எடுக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக 90 அடிக்கும் மேலாக ஒரு குழியை தோண்டி வருகின்றனர்.
இவர்களுடன் தனியார் அமைப்பும் இணைந்து இந்த போர்வெல் போடும் வேலையில் இறங்கி உள்ளனர். இதன்மூலம் குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இறுதிக் கட்ட முயற்சிகள் என்பதால் சுஜித் விரைவில் மீட்கப்படுவான் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய ஆர்வம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.