லோக் சபா தேர்தல்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருச்சி தொகுதி.. களநிலவரம் என்ன தெரியுமா?
2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் திருச்சி மிக முக்கியமான தொகுதியாக உருவெடுத்து இருக்கிறது.
Recommended Video
திருச்சி: 2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் திருச்சி மிக முக்கியமான தொகுதியாக உருவெடுத்து இருக்கிறது.
ஒரு காலத்தில் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்று தீராத கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் விருப்பங்களில் ஒன்றாகவும் அது இருந்தது. அதன்பின் ஆட்சி மாற மாற, அந்த யோசனைக்கான மவுசு குறைந்தது.
ஆனால் திருச்சியின் மவுசு மட்டும் குறையவே இல்லை. சென்னையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றால், ஆட்சியாளர்கள் அடுத்து நிற்கும் ஸ்டாப் திருச்சியாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு திருச்சி தொழில் தொடங்கவும், புதிய நிறுவனங்கள் தொடங்கவும் எளிதான இடமாக இருந்தது.
சிறப்பாக தயார்
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தற்போது 2019 லோக் சபா தேர்தலுக்காக மாஸாக தயாராகி வருகிறது. எல்லாவற்றிலும் சம்திங் டிஃபரண்டாக இருக்கும் திருச்சி தனக்கான எம்பியை செலக்ட் செய்வதிலும் கொஞ்சம் வித்தியாசம்தான். இந்த எடுத்துக்காட்டை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
எல்லா கட்சியும்
திருச்சியில் இருந்து கிட்டத்தட்ட எல்லா கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் இதுவரை எம்.பியாக தேர்வாகி இருக்கிறார்கள். காங்கிரஸ், திமுக, அதிமுக, மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், சுயேச்சை என்று வகை வகையாக திருச்சி மக்கள் எம்.பிக்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். இப்போது புரிகிறதா திருச்சி ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று.
கணக்கு
திருச்சி தொகுதியில் கடந்த லோக்சபா தேர்தல் கணக்குப்படி 13,87,140 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 6,89,228 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 6,97,912 பெண் வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
17 தேர்தல் முடிவுகள்
திருச்சியில் இதுவரை நடந்த 17 லோக் சபா தேர்தல்களில் 4 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 3 முறையும், பாஜக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக தலா 1 முறையும் வென்றுள்ளன.
வித்தியாசமான தேர்வு
இந்த அளவிற்கு திருச்சி மக்கள் மிகவும் கலவையாக தங்கள் வேட்பாளரை தேர்வு செய்துள்ளனர். பெரும்பாலும் கட்சியை வைத்து பார்க்காமல், வேட்பாளரை வைத்தே தேர்தலை சந்தித்து இருக்கிறார்கள். இதனால் அடுத்த லோக்சபா தேர்தலில் நல்ல வேட்பாளரை நிறுத்தும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
பி குமார் பதவி
தற்போது திருச்சி தொகுதி எம்.பி.யாக, அதிமுகவை சேர்ந்த பி.குமார் பதவி வகித்து வருகிறார். இவருக்கு 47 வயதாகிறது. புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட இவர் தஞ்சாவூரில் வளர்ந்தவர். பிஎஸ்சி, பிஎல் படித்துள்ளார். 2009 லோக்சபா தேர்தலிலும் இவர்தான் திருச்சி எம்.பியாக தேர்வானார். ஆனால் அப்போது காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை விட 4,335 வாக்குகள் மட்டும் அதிகமாக பெற்று வெற்றிபெற்றார்.
2014 தேர்தல்
ஆனாலும் திருச்சி மக்களுக்கு இவர் மீது இருந்த ஆதரவு காரணமாக 2014 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் இவர் அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். கடந்த 2014 லோக் சபா தேர்தலில் பி.குமார் 150476 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் மொத்தம் 458,478 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்றார்.
மு.அன்பழகன் போட்டி
திமுக வேட்பாளர் மு.அன்பழகன்தான் திருச்சியில் வெற்றிபெறுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். காரணம், சென்று தேர்தலில் பி.குமார் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றதால் அன்பழகன் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அனைவரையும் அதிர வைத்து அசாத்திய வெற்றி பெற்றார் பி.குமார். நாடாளுமன்றத்தில் எம்.பியாக இவரது செயல்பாடு மிகவும் சிறப்பாகவே இருந்துள்ளது. மற்ற அதிமுக எம்.பிக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.
எவ்வளவு
லோக் சபாவில் இவர் மொத்தம் 38 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 462 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதிமுக எம்.பிக்கள் சார்பாக சராசரியாக எழுப்பப்பட்ட கேள்வியை விட இது அதிகம் ஆகும். ஆனால் இவர் தனி நபர் மசோதா எதையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. என்னதான் நிறைய கேள்விகள் கேட்டாலும் அட்டென்டென்ஸ் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே வாங்கியுள்ளார். மொத்தம் 80% வருகை பதிவேடு இவர் கொண்டுள்ளார்.
வருகைப்பதிவேடு என்ன
தமிழகத்தில் அதிமுக சராசரியாக எம்.பிக்கள் 78% வருகை பதிவேடு வைத்துள்ளனர். அதேபோல் இவர் தனக்கு வழங்கப்பட்ட 25 கோடி ரூபாய் எம்.பி நிதியில் 19 கோடியை செலவு செய்துள்ளார். பாலம் கட்டுதல் போன்ற திட்டங்களுக்காக இவர் இந்த நிதியை செலவு செய்துள்ளார். 6 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது.
என்ன நடக்கும்
வரும் 2019 தேர்தலில் திருச்சியில் இவர் மீண்டும் நிற்க வைக்கப்படுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். தொகுதியில் மீண்டும் எந்த கட்சி வரும் என்பது திருச்சி மக்களுக்கே புதிரான விஷயம்தான். தற்போதைய மாறி வரும் சூழலில் மலைக்கோட்டை தொகுதியைக் கைப்பற்றப் போவது யார் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக உள்ளது.