விபத்தில் இறந்த மகன்.. அடுத்த நொடியே வீட்டில் வெடித்த சிலிண்டர்.. திருச்சியில் 4 பேர் பலியான சோகம்!
திருச்சி: திருச்சியில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு பூலாங்குடி காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
பள்ளி ஆசிரியை கௌரி அவரின் இரண்டு மகள்கள், ஒரு மகன் என நான்கு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்து உள்ளனர். நவல்பட்டு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த விஜய்கவுரி(60) ஆசியராக ஒய்வுபெற்றவர். இவரின் மகன் விஜயகுமார் (26), மகள்கள் விஜயலட்சுமி (23), வாணி (21) ஆகிய நான்கு பேரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர்.
தீவிரம் அடைகிறது.. விரைவில் வரும் நிசார்கா புயல்.. செம மழை பெய்ய போகிறது.. கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்
நடந்தது என்ன?
மகன் டிப்ளமோ முடித்துவிட்டு துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாரை தற்போது வீட்டில் வைத்து விஜயகவுரி பராமரித்து வந்தார். இன்று மதியம் தீடீரென விஜயகுமாரின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. இது குறித்து ஜெயகவுரி மற்றும் குடும்பத்தினர் 108 க்கு போன் செய்துள்ளார்கள்.
மகன் மரணம்
அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயகுமாரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறி இருந்தார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகவுரி மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய மூன்று பேரும் அழுது கொண்டு இருந்துள்ளார்கள். இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணி அளவில் ஜெயகவுரி வீட்டில் இருந்து டமார் என்று பெரிய அளவில் சத்தம் கேட்டது.
எல்லோரும் பலி
சிலிண்டர் வெடிப்பு சத்தம் கேட்ட நிலையில் வீடு வெடித்து சிதறி தீப்பிடித்தது. அங்கிருந்து பெரிய அளவில் நெருப்பும், புகையும் வந்தது. அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டின் ஒரு பகுதி இடிந்த நிலையில் நான்கு பேரும் உடல் சிதறி இறந்து தீ பிடித்து உடல் முழுவதும் பாதி வெந்த நிலையில் சிதறி கிடைத்தார்கள்.எல்லோரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
வழக்கு பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விரக்தியில் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்பது பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.