ஏய்யா.. உனக்கு மோதறதுக்கு என் நாய் தான் கிடைச்சுதா?.. சண்டை.. கடைசியில் ஒரு உயிர் போச்சு!
இளைஞனை கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
திருச்சி: ரோட்டில் வந்து கொண்டிருந்த நாய் மீது பைக் மோதிவிட்டது.. இதுதான் ஒரு உயிரை கொலை செய்யும்வரை சென்றுவிட்டது. "உனக்கு மோதறதுக்கு என் நாய் தான் கிடைச்சுதா?" என்று ஆரம்பித்து இருக்கிறது இந்த சண்டை!
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனி பிரதானபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருக்கு 35 வயதாகிறது. இவர் ஒரு நாய் வளர்த்து வருகிறார்.
கடந்த 22-ந் தேதி அந்த வளர்ப்பு நாயுடன் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், குபேந்திரன் ஆகியோர் பைக்கில் வந்து, நாய் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது. இது தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என தெரியவில்லை.
ஆனால், மோதல் தொடங்கிவிட்டது. "உனக்கு மோதறதுக்கு என் நாய் தான் கிடைச்சுதா?" என்று வீரமுத்து கேட்டு, பைக்கில் வந்த அந்த 2 பேரையும் தாக்கியதாக தெரிகிறது. அவ்வளவுதான்.. அடி வாங்கிய அந்த 2 பேரும், ஆதரவாளர்களை உருட்டுக்கட்டையுடன் வரவழைத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கியதில், வீரமுத்து உயிர் பிரிந்தது. இந்த கொலை தொடர்பாக நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
மாரியப்பன், அவரது தம்பி குபேந்திரன், பரமசிவம், ரவி, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர்தான் உருட்டுக்கட்டையால் வீரமுத்துவை கொன்றவர்கள் என்பது உறுதியானது. இந்த இவர்கள் 5 பேரும் நவல்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 4 பேரை திருச்சி ஜெயிலும், 15 வயது சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
இருந்தாலும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பி உள்ளாராம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நாய் மேல பைக் மோதிய விவகாரம் இப்படி கொலை, கேஸ், ஜெயில் வரை சென்றுவிட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.