ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்!
சுரேஷை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது
திருச்சி: "ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு என் காலை உடைச்சிடுவாங்க" என்று கொள்ளையன் சுரேஷ் கோர்ட்டில் நீதிபதியிடம் இன்று கதறினான்.
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் ஆவார். இதற்கு அடுத்த புள்ளி சுரேஷ்தான். முருகனின் சொந்தக்காரன். சீராத்தோப்பைச் சேர்ந்தவர். கடந்த வாரம் செங்கம் கோர்ட்டில் சரணடைந்த சுரேஷை.. திருச்சி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த கொள்ளையில் முக்கியமான நபர் என்பதால், சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதி கோரி திருச்சி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு சுரேஷை போலீசார் அழைத்து வந்தனர்.
சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், கூடவே வந்து, கோர்ட்டிலும் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சுரேஷ், "என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி தந்துட்டால், போலீஸ்காரங்க என்னை அடிச்சு காலை உடைச்சிடுவாங்க.. எனக்கு பயமா இருக்கு" என்று நீதிபதியிடம் சுரேஷ் கதறினான்.
அதற்கு நீதிபதி, "அதெல்லாம் ஒன்னும் போலீஸ்காரங்க அடிக்க மாட்டாங்க.. கண்ணியத்துடன்தான் நடத்துவாங்க" என்று சுரேஷிடம் கூறினார்
பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி தந்து உத்தரவிட்டார். இதையடுத்து, சுரேஷை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.