திருச்சியில் ஒரே ஏரியாவில் 7 பேருக்கு கொரோனா.. தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்த கலெக்டர்
திருச்சி: திருச்சியில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதால், கொட்டப்பட்டு மாரியம்மன் கோயில் தெரு, அம்பாள் நகர் பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் இன்று 806 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருச்சியில் ஏழு பேருக்கு ஒரே நாளில் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் திருச்சி பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தற்போது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது. இதில் 70 பேர் ஏற்கனவே பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 25 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
எல்லையில் படைகளை குவிக்கும் சீனா.. திடீரென மோடிக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்.. என்ன நடக்கிறது?
திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து போர்டு வைக்கப்பட்டுள்ளது.