கதவை தாழ்போடாமல் தூங்கிய தங்கவேல்.. நைசாக நுழைந்து 80 பவுன் நகையை கொள்ளையடித்த பரிதாபம்
துறையூர்: திருச்சி மாவட்டம் அருகே பஸ் டிரைவர் வீட்டில் 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல். அரசு பேருந்தின் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு உணவு அருந்திவிட்டு குடும்பத்தினருடன் உறங்கிவிட்டார்.
அப்போது ஞாபக மறதியால் கதவை தாழ் போடாமல் இருந்துவிட்டார். இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகளும் ரூ 50 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து துறையூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தங்கவேல் தூக்க கலக்கத்தில் கதவை தாழ் போடாமல் படுத்துவிட்டதால் திருடர்கள் அந்த சம்பவத்தை பயன்படுத்தி திருடியது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.