ஆசையை தூண்டிய ஆன்லைன் ரம்மி.. வீட்டில் இருந்த நகையையும் வைத்து ‘போச்சே’.. ரயில் முன் பாய்ந்த மாணவர்!
திருச்சி: ஆன்லைன் ரம்மி விளையாடியதன் காரணமாக பணத்தை இழந்ததையடுத்து பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆன்லைன் ரம்மி தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் விதத்தில் ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு தடை செய்யவேண்டும்! சொல்வது ரம்மி
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நியாயமான விளையாட்டு அல்ல, பணமும் பறிபோகும், மன உளைச்சலும் ஏற்படும் என காவல்துறை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. அதாவது "நாம் விளையாடும் இதர விளையாட்டுகளை போல இது கிடையாது. இதில் எதிர் தரப்பில் மனிதர்களுக்கு பதில் புரோகிராமிங் செய்யப்பட்ட கணினிதான் விளையாடும். எனவே எப்படி விளையாடினாலும் நீங்கள் தோற்பது நிச்சயம். முதலில் உங்களுக்கு போனஸ் பணம் கிடைக்கும். இதுதான் உங்களுக்கான தூண்டில். பின்னர் முதலிரண்டு முறை நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தற்கொலை
ஆனால் அடுத்த நான்கு முறை உங்களது ஆட்டம் தோல்வியில் முடியும். பின்னர், மீண்டும் வெற்றி பெறுவீர்கள். இது உங்களுக்கு புதிய நம்பிக்கை கொடுக்கும். எனவே இழந்த பணத்தை மீட்டுவிடுவோம் என உறுதியாக நீங்கள் விளையாட தொடங்குவீர்கள். ஆனால் கடைசியில் உங்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சும்." என காவல்துறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் 23 வயது பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இந்த விளையாட்டில் பணத்தை இழந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நகை
உயிரிழந்தவர் திருச்சி மணப்பாறையின் மலையாண்டிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பதும் இவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதனால் பணத்தை இழந்ததால் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்று மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். வீட்டிலிருந்து நகையை எடுத்து சென்றதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
விசாரணை
நேற்று இரவு வரை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவர், இரவு 9.30 மணிக்கு மேல் தனது வாட்ஸ்அப்பில் "நான் ஆன்லைன் ரம்மி விளையாடி விளையாடி அதற்கு அடிமையாகிவிட்டேன். என்னுடைய தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணம்" என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். பின்னர் அவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.