17 வயது மாற்றுதிறனாளி மகனுடன் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் நடக்கும் பெண்.. நீங்களும் உதவலாமே
திருச்சி: பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம். அப்போது உள்ளே வந்தார் சடயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளவரசி என்ற தாய். அவர் தனது மகன் லோகேஷ்வரனை இடுப்பில் தூக்கி வைத்திருந்தார். ஆனால் லோகேஷ்வரன் குழந்தை கிடையாது. 17 வயதாகிறது. ஆனால் நடக்க கஷ்டப்படும் மாற்றுத் திறனாளி.
இந்த காட்சியை பார்த்ததுமே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரது கண்களிலும் அவர்களை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து, கன்னத்தின் வழியே வழிந்து ஓடியது.
ஆனால், இதுவரை இவரின் சோகம் மாவட்ட ஆட்சியர் காதுகளுக்கு எட்டவில்லை என்பது அதைவிடவும் பெரிய சோகம்.
ஏன், கலெக்டர் அலுவலகத்திற்கு இளவரசி நடையாய், நடக்கிறார்? ஏன், தனது மகனை அவர் தூக்கியபடி நடக்கிறார்? பார்ப்போம் வாருங்கள்:
திருச்சி மாவட்டம் சடயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இளவரசி. இவரது 17 வயது மகன் லோகேஷ்வரன் ஒரு மாற்றுத் திறனாளி. 10ம் வகுப்பை முடித்துவிட்டு 11ம் வகுப்புக்கு செல்ல காத்திருக்கிறார். ஆனால், அங்குதான் சிக்கல்.
இதுவரை, தனது மகனை இளவரசி, சைக்கிளில் அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு வந்தார். ஆனால், 10 கி.மீ தூரத்திலுள்ள பள்ளியில் ஒன்றில்தான் இனி லோகேஷ்வரன் படிக்க வேண்டியுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும், வாகனத்தை கேட்டு மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகத்தில் மனு போட்டிருந்தார் இளவரசி. ஆனால், இதுவரை வாகனத்திற்கான உதவி கிடைக்கவில்லை.
4 மாநிலங்கள் ரொம்ப உஷாராக இருக்கனும்.. கொரோனா வேகமாக பரவுகிறது.. சுகாதாரத்துறை கடிதம்
இதுவரை 5 முறை மனு போட்டும் கண்டுகொள்வாரில்லை. எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகிறார் இளவரசி.
படிப்பு இருந்தால்தான், தனது மகனை, அடுத்த உயரத்திற்கு தூக்கி விட முடியும் என்பதே அவரது ஆசை. இவரது கோரிக்கை நியாயமானது. லோகேஷ்வரனை பார்த்ததுமே, அவரது நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சாமானியர்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் இன்னும் கண் திறந்து பார்க்காதது ஏனோ?
திருச்சி மாற்றுத்திறனாளி லோகேஸ்வரனுக்கு யாரேனும் உதவ முன்வந்தால் அவரை 9787641154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.