அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி வீட்டில் புகுந்த "விஐபி"யின் மகன்.. விரட்டி பிடித்த மக்கள்!
அதிமுக எம்எல்ஏ வீட்டில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி: அதிமுக பெண் எம்எல்ஏ பரமேஸ்வரி வீட்டில் சுவர் ஏறி குதித்து கொள்ளையடிக்க முயன்ற நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி. இவருடைய கணவர் முருகன். மண்ணச்சநல்லூரில் எதுமலை செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார்.
அந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு புது வீடு கட்டி வருகிறார். அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் கட்டுமான பணி நடக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டிலேயே தங்கி இருக்கிறார்கள்.
சுவர் ஏறி குதித்தனர்
இந்நிலையில் நேற்றிரவு புது வீட்டில் தம்பதி இருவரும் தங்கியிருந்தனர். அப்போது, பரமேஸ்வரி வசித்து வந்த வீட்டிற்கு 3 திருடர்கள் வந்திருக்கிறார்கள். வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து, 3 பேரும், வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர்.
3 பேர் திருட முயற்சி
ராத்திரி நேரத்தில் இந்த சத்தம் பலமாக கேட்கவும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, திருடர்கள் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் 3 பேரையும் சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர், எப்படியோ தப்பி கொண்டு வந்திருந்த பைக்கில் ஏறி சென்றுவிட்டனர். ஒருத்தர் மட்டும் வசமாக மாட்டிக் கொண்டார்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ பரமேஸ்வரிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து வீட்டுக்கு வந்தார். பிறகு கொள்ளை முயற்சி பற்றி சிறுகனூர் போலீசுக்கு புகார் சொன்னார். இதையடுத்து போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இளைஞரை மீட்டு விசாரணை நடத்தினர்.
விஐபி மகன்
திருடன் பெயர் கார்த்திக், வயசு 28 என்பது தெரியவந்தது. இவர் கணேசபுரத்தை சேர்ந்த மறைந்த அதிமுக பிரமுகர் ஆங்கியத்தார் ராஜேந்திரனின் மகன் என்பது கூடுதல் தகவல்.
2 பேருக்கு வலை
திருட உதவிக்கு வந்தது கார்த்திக்கின் நண்பர்களாம். இதையடுத்து, கார்த்திக்கிடம் செல்போன், 4 சிம்கார்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.