திருச்சியில் 2-வது நாளாக அடைமழை.. காவிரி பாலத்தில் சேதம்.. திருவெறும்பூரில் இடிந்த வீடுகள்
Recommended Video
திருச்சி: திருச்சியில் 2-வது நாளாக அடைமழை பெய்தது. இதனால் காவிரி பாலத்தில் சேதம் ஏற்பட்டது. திருவெறும்பூரில் வீடுகள் இடிந்து விழுந்தன.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி வருவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது.
நேற்று 2-வது நாளாக மதியம் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையினால் கன்டோன்மெண்ட் அய்யப்பன்கோவில், மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், டி.வி.எஸ். டோல்கேட், கருமண்டபம் பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
அரபிக் கடலில் உருவான மற்றொரு புயல் 'மகா' - 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தூண் மேல் பகுதி
சாலை ஓரங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. கருமண்டபம் பகுதியில் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. திருச்சியில் பெய்து வரும் அடைமழையினால் காவிரி பாலத்தின் 3-வது தூண் மேல் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
பேரிகாட்
இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக போலீசார் ‘பேரிகாட்' வைத்து உள்ளனர். ஏற்கெனவே சிறிய அளவில் இருந்த பள்ளம் தொடர்ந்து பெய்த மழையினால் பெரிதாகி சேதம் அடைந்து உள்ளது. பாலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மலைக்கோவில்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் ராஜவீதியில் கூத்தைப்பாரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான யாரும் வசிக்காத பழமையான மாடி வீடு உள்ளது. அந்த வீடு நேற்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது.
ஒப்பந்த தொழிலாளி
இந்த வீட்டின் இடிபாடுகள் விழுந்ததில் அருகில் இருந்த ஒரு ஓட்டு வீடும் சேதம் அடைந்தது. அந்த வீட்டில் வசித்து வரும் பெல் ஒப்பந்த தொழிலாளி சுப்பிரமணி, அவரது மனைவி மின்னல் கொடி, மகன்கள் புகழேந்தி, பூபாலன், சிவா, ஆனந்த பிரபு ஆகிய 6 பேரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக 6 பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.
குளிர்ந்த காற்று
மேலும் நேற்று மாலையில் இருந்து இரவு வரை திருச்சியில் அவ்வப்போது சாரல் மழை தூறிக் கொண்டே இருந்தது. அடை மழையினால் திருச்சியில் நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசியது. இதனால் வீட்டில் மின்விசிறி இல்லாமல் தூங்க முடிந்தது.