உச்சகட்ட வெறுப்பு.. நடுரோட்டில் பேனரை கிழித்து எரித்து.. தாறுமாறாக திட்டிய ரஜினி ரசிகர்!
திருச்சி: ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்த ரஜினி ரசிகர் - நடுத் தெருவில் ரஜினி பேனரை எரித்ததுடன் திட்டிவிட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவார் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 'உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சித் தொடங்கவில்லை, அரசியலுக்கு வரமாட்டேன்' என அறிவித்தார் ரஜினிகாந்த்.
"தலைவா... வா...வா' ரஜினிகாந்த் வீடு முன்பு ரசிகர்கள் கண்ணீருடன் தர்ணா
நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.
மன்னியுங்கள்
இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பைக் கேட்டு, தமிழகத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்
ரஜினி வீடு
இதனால், ரஜினி ரசிகர்கள் சோகத்துடன் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். சில ரசிகர்கள் இன்று மாலை ரஜினியின் விட்டு முன்பு கண்ணீருடன் தர்ணா போராட்டம் கூட நடத்தினர். தலைவா வா என்று உருக்கமாக கோரிக்கை வைத்தும் வருகிறார்கள்.
கோபம் அடைந்தார்
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, ஆண்டாள் தெருவில் வசிக்கும் பரமசிவம். ரஜினி ரசிகரான இவர் ஆட்டோ ஓட்டுனர் ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்து ஆத்திரம் தாங்காமல், நந்தி கோவில் அருகே, ரஜினியின் பேனரை எரித்தார்.
திட்டிவிட்டு சென்றார்
மேலும், ரஜினி இத்தனை காலம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இப்படி ஒரு அறிவிப்பைக் கேட்டு பெரும் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறி, கடுமையான சொற்களால் திட்டி பேனரை எரித்துவிட்டுச் சென்றார்.