திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.. மாடு முட்டியதில் பெண் படுகாயம்
திருச்சி: திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஜோதிலட்சுமி என்ற பெண் படுகாயம் அடைந்தார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளும், எருது விடும் போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த நிலையில் இன்று பாலமேட்டில் நடந்தது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் 400க்கும் மேற்றபட்ட காளைகளும் ஏராளமான மாடு பிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர்.
இன்று, காலை முதலே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக திருச்சியில் நடைபெற்று வந்தது. இதை காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் உறையூர் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்னை திடீரென பாய்ந்து சென்று மாடு முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சூரியூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.