ஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், கோடியக்கரை, வேதாரண்யம் பகுதிகளுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அந்தந்த பகுதி கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப
திருச்சி: ஆடி அமாவாசை அன்று மக்கள் ஆறு, கடல்களில் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவை கொடுப்பது வழக்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் வருமிடத்தில் கொரோனா தொற்று வாய்ப்பு அதிகமிருப்பதால், அன்றைய தினம் பொதுமக்கள் திருச்சி அம்மா மண்டபத்திற்கு வருவதற்கு அரசின் வழிகாட்டுதல்படி போலீசார் தடைவிதித்துள்ளனர். இதேபோல ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரைக்கும் தர்ப்பணம் கொடுக்க வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து நாடெங்கும் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமூக விலகலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏராளமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதன்படி புனிதநீராடுமிடமான ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையும் மூடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரையும் மக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
முன்னோர்களுக்கு வரவேற்பு
ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள்
நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை நாளாகும். அன்றும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
முன்னோர் வழிபாட்டுக்கு நம் நாட்டில் பல புனித தலங்கள் இருக்கின்றன அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் முக்கியமானதும் விசேஷமானதுமான தலம் ஆகும். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். வேதாரண்யம், கோடியக்கரை, காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபத்திலும் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் அக்னி தீர்த்த கடலில் நீராடி, பூஜை செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி வரும் வாகனங்கள் பாம்பன் ரோடு பாலத்தில் சோதனை செய்து திருப்பி அனுப்பப்படும் என்று ராமேஸ்வரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் எச்சரித்துள்ளார்.
வழக்குப்பதிவு நடவடிக்கை
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை புரோகிதர்கள் யாரும் செய்வதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி வெளியூர்களில் இருந்து புரோகிதர்களை அழைத்து வந்து யாரும் கடற்கரையில் கூட்டமாக நீராடி பூஜை செய்தால் அந்த புரோகிதர் மற்றும் பக்தர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தடை
அதே போல ஆடி அமாவாசை அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவை கொடுக்க வருவார்கள்.ஆயிரக்கணக்கான மக்கள் வருமிடத்தில் கொரோனா தொற்று வாய்ப்பு அதிகமிருப்பதால், அன்றைய தினம் பொதுமக்கள் அம்மா மண்டபத்திற்கு வருவதற்கு அரசின் வழிகாட்டுதல்படி போலீசார் தடைவிதித்துள்ளனர்.
திதி தர்ப்பணம் கிடையாது
இந்த தடைக்கு ஆதரவு தெரிவித்தும், பொதுமக்கள் நலன் கருதியும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புரோகிதர்களும் அன்றைய தினம் அம்மா மண்டபத்தில் திதி, தர்ப்பணம் போன்றவை செய்து வைக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இரு தரப்பினர் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையருகே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளில் பொது இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடை உள்ளதால் வீட்டில் இருந்தே அனைவரும் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது சிறப்பு.