கஜா புயல் களத்தில் கல்லூரி மாணவர்கள்.. நேரில் போய் சபாஷ் போட்ட ஜிவி பிரகாஷ்!
Recommended Video
திருச்சி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கியும், நிவாரண பொருட்களை பெற உதவியாகவும் செயல்படும் திருச்சி நேஷ்னல் கல்லூரி மாணவர்களுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. கஜாபுயலில் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் சூறையாடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கட்சிகள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உதவிகளை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் தங்களுக்கு உதவிய திருச்சி நேஷ்னல் கல்லூரி மாணவர்களுக்கு,வேதாரண்ய பகுதி விவசாயிகள், அந்த டெம்போ முழுக்க இளநீர்களை அனுப்பி வைத்தனர். அந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்தது திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் போட்ட ஒரு ட்வீட்தானாம், புயல்வந்த சிலமணி நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையை உணர்ந்த ஜி.வி.பிரகாஷ் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிடுமாறு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்து ட்வீட் பதிவு செய்தார்.
இந்தநிலையில், டெல்டா பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கிய ஜி.வி.பிரகாஷ், அடங்காதே படத்தின் இயக்குநர் ஷான் உள்ளிட்டோர் சகிதமாக திருச்சி நேஷ்னல் கல்லூரியில் இருந்த மாணவர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.வி.பிரகாஷ் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் : "கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்த்த பிறகுதான் உண்மையான நிலவரம் தெரிகிறது. பல லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துகிடக்கின்றன. மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்துவருகின்றனர்.
எவ்வளவு வேலை செய்தாலும் பத்தாத நிலைதான் உள்ளது. நிலைமையை மீண்டும் பழையபடிக்கு கொண்டுவர பல மாதங்கள் ஆகும். இங்கு லட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காய்களும் விழுந்துகிடக்கின்றன. இதுதான் நேரம் எனப் பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான விஷயம். வழக்கமான மார்க்கெட் விலைக்கு வியாபாரிகள் வாங்க வேண்டும். அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
உலகத்துக்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த விஷயம் என்னவென்றால், நல்ல மார்க்கெட் விலையில் வாங்க உதவ வேண்டும். இளநீரை மொத்தமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து இளைஞர்களையும், மாணவர்களையும் கவனித்து வருகிறேன். தன்னார்வமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், மக்களுக்கு நல்லது செய்ய அதிகமாகக் களத்துக்கு வருகிறார்கள். இதுபோன்ற தன்னார்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.