அடுத்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் சிவபதி... கொதிக்கும் அரியலூர் ர.ர.க்கள்
திருச்சி: முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி தனது திருச்சி மாவட்டத்தை விடுத்து பக்கத்து மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூரில் அரசியல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்படைவதோடு, இது தொடர்பான புகாரை தலைமை வரை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், என்.ஆர்.சிவபதியும் மாமா, மாப்பிள்ளை என அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த என்.ஆர்.சிவபதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசியல் செய்வதாக இப்போது பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2011 ஜெயலலிதா அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த சிவபதியிடம் இருந்து அதிரடியாக பதவியை பறித்து ஓரம் கட்டினார் ஜெயலலிதா.
அமைதி
மேலும், மாவட்டச் செயலாளர் பதவியையும் அவரிடம் இருந்து பறித்த ஜெயலலிதா ரத்தினவேலிடம் அதை வழங்கினார். இதனால் நொந்துப்போன சிவபதி சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இநிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தவுடன் மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு திரும்பினார்.
பாரிவேந்தரிடம் தோல்வி
கடந்த மக்களவைத் தொகுதியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.சிவபதி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அதிபருமான பாரிவேந்தரிடம் தோல்வியை தழுவினார். இதனிடையே அங்கு தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அந்த மாவட்ட அரசியல் நிலவரத்தை அத்துப்படியாக தெரிந்து வைத்துள்ளார் சிவபதி.
கொதிப்பு
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அமமுகவில் இருந்து பல நிர்வாகிகளை அக்கட்சியிலிருந்து பிரித்து அதிமுகவில் இணைத்துள்ளார் சிவபதி. இது அந்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் குறிப்பாக, கொறடா ராஜேந்திரன் போன்றோருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஊருக்கு நான் போய் அரசியல் செய்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா, அவர் மட்டும் இங்கு எதற்கு வர வேண்டும் என தலைமைக் கழகத்தில் ஆவேசமாக கேட்டுள்ளார்.
சமாதானம்
அரசு கொறடா ராஜேந்திரனை கடந்த வாரம் சந்தித்து பேசிய, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோர் பேசிக்கொள்வோம், பார்த்துகொள்கிறோம் எனக் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.