அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பளார் விட்ட ஒன்றியச் செயலாளர்... அமைச்சர் தங்கமணி பஞ்சாயத்து
திருச்சி: அதிமுக பெண் எம்.எல்.ஏ.வுக்கு அந்த கட்சியை சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ஒருவரே கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக பெண் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி மீது, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் கன்னத்தில் அடித்த விவகாரம் இப்போது வெளிவந்துள்ளது.
தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் இந்த அடிதடி சம்பவம் நடந்துள்ளது.
பெண் எம்.எல்.ஏ.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பரமேஸ்வரி முருகன். கடந்த 2016-ம் ஆண்டு முதலே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருபவர். இவரது செயல்பாடுகள் பல நேரங்களில் கட்சி தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அந்தளவிற்கு அவரும் அவரது கணவர் முருகனும் தடாலடி காரியங்களில் இறங்கி வம்பில் மாட்டிக்கொள்வார்கள். ஏற்கனவே சமயபுரம் கோவில் அருகே ஹை மாஸ் விளக்கு அமைக்க பரமேஸ்வரி கமிஷன் கேட்ட ஆடியோ வைரலாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
திருந்தவில்லை
ஆனாலும், அதற்கு பின்னர் கூட தனது செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ. மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்த அவர், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபின்னர் பல நிர்வாகிகளுக்கும் போனை போட்டு தேர்தல் செலவுக்கு வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்க கூறி உத்தரவு போட்டார். இதனிடையே கட்சி மேலிடத்தில் இருந்து தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை பரமேஸ்வரி முருகன் முறையாக யாருக்கும் பிரித்துக்கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
பணம் வசூல்
இதனிடையே கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பணத்தை பிரித்துக்கொள்வதில் எம்.எல்.ஏ. தரப்புக்கும், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தரப்புக்கும் கடந்த ஒரு மாதமாகவே உரசல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞயிற்றுக்கிழமை மாலை எம்.எல்.ஏ. பரமேஸ்வரியை சந்திக்க சென்ற ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் பணம் தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது ஒன்றியச் செயலாளரை எம்.எல்.ஏ. ஒருமையில் பேசி, அடிக்க கை ஓங்கியதாக கூறப்படுகிறது.
பஞ்சாயத்து
இதனால் கோபம் தலைக்கேறிய ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ.வை கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாராம். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதிய பரமேஸ்வரி, அமைச்சர் தங்கமணியை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு கதறி அழுத்துள்ளார். சட்டமன்றம் நடக்கும் சூழலில் ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள் என கோபப்பட்ட அமைச்சர் தங்கமணி, ஒன்றியச் செயலாளரை சென்னைக்கு அழைத்து பஞ்சாயத்து செய்து வருகிறார்.