ஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக!
வெல்லமண்டி நடராஜன் வெளியிட்ட அறிக்கையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
திருச்சி: "ஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா" என்ற அதிருப்திதான் மேலோங்கி வருகிறது.. கொரோனா தொற்று பரவுமே என்ற அபாயம் இல்லாமல், முதல்வரை வரவேற்க, ஒட்டுமொத்த கட்சிக்காரர்களையும் திரண்டு ஓரிடத்துக்கு வரும்படி அறிக்கையை விட்டு அழைப்பது பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: கொரோனா தொற்று தடுப்புப் பணிகளையும், பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளையும் ஆய்வு செய்யும் வகையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
அதையொட்டி, அன்றைய தினம் காலை 8.30-க்கு விமானம் மூலம் திருச்சி வரும் அவா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக புதுக்கோட்டை செல்கிறாா். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலை 5 மணிக்கு திருச்சிக்கு வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அறிக்கை
எனவே முதல்வரை வரவேற்க கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத்தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், முன்னாள் தலைமை பேச்சாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட ஏனைய அணியினர் கலந்துகொள்ள வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாராட்டு
முதல்வரை வரவேற்க ஒரு மாநில அமைச்சர் எடுத்து கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கதுதான்.. விசுவாசமிக்கதுதான்.. ஆனால், அவர் அழைப்பு விடுத்துள்ள நபர்கள் எல்லாம் திரண்டு வந்தால் என்னாகும்? தொற்று அபாயம் இன்னமும் குறையவில்லை.. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிகை மிரள வைத்து கொண்டிருக்கும் நேரத்தில், இத்தனை பேரையும் ஒரே இடத்திற்கு திரண்டு வருமாறு சொல்வது சரிதானா?
அபாயம்
இந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடியார் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்பதை பொதுமக்களைவிட அமைச்சர்தானே நன்றாக அறிந்து வைத்திருப்பார்? இப்படி அழைப்பு விடுத்து, அதன்மூலம் நிர்வாகிகள் திரண்டு தொற்று ஏதேனும் பரவிவிட்டால், முதல்வரே இதை ஏற்க மாட்டார் என்பது அதிமுகவினர் அறியாததா? என்பது விளங்கவில்லை.
சீரியஸ்தன்மை
இப்படி நேரில் மீட்டிங் போட்டுதான், அமமுகவின் வெற்றிவேல் முதல் கட்சி பாகுபாடின்றி, ஒவ்வொரு தலைவர்களையும் நாம் இழந்து வருகிறோம்.. இன்னமும் ஆளும் தரப்பிலேயே, அதுவும் அமைச்சர் பொறுப்பில் உள்ளவருக்கு சீரியஸ்தன்மை தெரியாதது வருத்தமாக இருக்கிறது.. ஒருவேளை அமைச்சர் அறிக்கை மூலம் அழைத்துவிட்டார் என்பதற்காக, இவ்வளவு நாள் பாதுகாப்பாக இருந்தவர்களும், வேறு வழியின்றி திரண்டு வந்தால், அதன்மூலம் வரும் பாதிப்பை யார் ஏற்பது? அதற்கு யார் பொறுப்பு?
ஓஎஸ் மணியன்
ஏற்கனவே அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாக்கள் பெரும் சர்ச்சையை முந்தைய நாட்களில் ஏற்படுத்தியது.. அமைச்சர் ஓஎஸ் மணியன் கலந்துகொண்ட பூமி பூஜை விழாவாகட்டும், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர், கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகட்டும் எல்லாமே சமூக இடைவெளியுடன் இல்லாமல் நடந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவினர்
அந்தவகையில், சமூக இடைவெளி என்பது பொதுமக்களுக்கு மட்டும்தான் அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ, அதிமுகவினருக்கோ இல்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக அமைச்சர் வெல்லமண்டியின் இந்த அறிவிப்பும் அமைந்திருப்பது மேலும் முணுமுணுப்பை கூட்டி உள்ளது.
திமுக
நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் மக்கள் மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா இன்னும் ஒழியவில்லை. தேவையில்லாமல் கூட்டம் கூடக் கூடாது. மாஸ்க் இல்லாமல் வெளியில் போகக் கூடாது. சுத்தமாக இருக்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என்று அழகாக விளக்கி சொன்னார். ஆனால் அவர் சொல்லி வாய்மூடுவதற்குள்ளாக இப்படி ஒரு அழைப்பை அமைச்சர் விடுத்திருப்பது அயர்ச்சி அடைய வைக்கிறது.