மலேசிய விமானம் 10 மணி நேரம் தாமதம்... பயணிகள் கடும் அவதி
திருச்சி: மலேசியா செல்ல வேண்டிய விமானம் சுமார் 10 மணி நேரம் தாமதமாக வந்து சென்றதால் திருச்சியில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் தினமும் காலை 8.55 திருச்சி வந்து 9.25 க்கு செல்வது வழக்கம். திங்கள்கிழமை அந்த விமானத்தில் செல்ல பலரும் பயண முன்பதிவு செய்து பாதுகாப்பு சோதனைகளை முடித்து காத்திருந்தனர்.
இந்நிலையில், மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், தொழில் நுட்பக்கோளாறு காரணமாக சிறிது நேரத்திலேயே மீண்டும் மலேசிய விமான நிலையத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. தொழில் நுட்ப வல்லுநர்கள் முயன்றும் கோளாறை உடனே சரி செய்ய முடிவில்லையாம்.
இதற்கிடையே, திருச்சியில் காத்திருந்த பயணிகளிடம் விமானம் தாமதமாக வரும் என அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டதே தவிர விமானம் வரவில்லை. விமானம் தாமதமானதால் பயணிகளும், அவர்களுடன் வந்தவர்களும் அவதிக்கு உள்ளாயினர். பின்னர் சுமார் 10 மணி நேரம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு விமானம் திருச்சி வந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 7.15 மணியளவில் திருச்சியிலிருந்து விமானம் புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 158 பயணிகள் வந்தனர், ஆனால் மலேசியா செல்லும் பயணிகளில் பலர் பயணத்தை ரத்து செய்ததால் 98 பேர் மட்டுமே புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து காத்திருந்த பயணிகளில் சிவக்குமார் என்பவர் கூறுகையில், மலேசியாவில் சுற்றுலா செல்ல முடிவு செய்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒரு குழுவாக புறப்பட்டோம். மலேசிய இரட்டை கோபுரம் மற்றும், பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்க்கவும் அதற்கான கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தியும் முன்பதிவு செய்திருந்தோம்.
ஆனால் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் அங்கு செல்ல முடியவில்லை. ஒரு நாள் தாமதமாகிவிட்டது, எனவே குறிப்பிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க முடியுமா என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.