ஊரடங்கிலும் அடங்காத "ஊறல்" .. பேரல் பேரலாக காய்ச்சி "சேவை".. 82 பேரை தூக்கியது போலீஸ்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை நடந்த சாராய வேட்டையின்போது மொத்தம் 82 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 534 லிட்டர் சாராயம், 2,086 லிட்டர் சாராய ஊறல், 117 லிட்டர் கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 23 இருசக்கர வாகனங்களும், 3 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் கூறினார்.
Recommended Video
திருச்சி அருகே மண்ணச்சநல்லூர், கல்லக்குடி பகுதிகளில் சாராயம் காய்ச்சிய, விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சாராயம் குடிக்க வந்தவரும் சிக்கினார்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த பச்சை வெளிப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(வயது 35), அவருடைய தம்பி சபா (30) ஆகியோர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் குடிக்க வந்த மூவராயன்பாளையம் சோழா பண்ணையை சேர்ந்த காசிலிங்கம் (34) என்பவரும் சிக்கினார். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, கல்லக்குடியை அடுத்த மால்வாய் சாதூர்பாகம் கிராமத்தில் லால்குடி இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மால்வாய் சாதுர்பாகம் கிராமத்தில் 3 பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். அவர்களில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதே பகுதியை சேர்ந்த இளையபெருமாள் (55), தங்கராஜ் (55) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சசிகுமார் என்பவரை தேடி வருகின்றனர். 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி அருகே உள்ள நைனாம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்ற நைனாபட்டியை சேர்ந்த மூக்கன்(47) என்பவரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய லட்சுமணன் மற்றும் பாலு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் போலீசாருடன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது சிறுநாவலூரைச் சேர்ந்த அசோக்குமார் (28) மோட்டார் சைக்கிளில் ஒரு கேனில் கள் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
துறையூா் காவல் சரகத்துக்குள்பட்ட பச்சமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையில் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது குண்டூா் கிராமத்தில் ராஜேந்திரன் (45), கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினா் வீட்டில் சோதனையிட்ட போது, வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் தயாரிக்க 3 பிளாஸ்டிக் நீா்தொட்டி(பேரல்)களில் 500 லிட்டா் ஊறல் போட்டு வைத்திருந்ததும், விற்பதற்காக 10 லிட்டா் சாராயம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவைகளை பறிமுதல் செய்த காவல்துறையினா், ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினருமான சித்திரன் ஆகியோரைக் கைது செய்தனா்.துறையூா் ஹரி, சொரத்தூா் பிரகாஷ் ஆகிய இருவரும் ராஜேந்திரனிடம் கள்ளச்சாராயத்தை வாங்கி விற்பது விசாரணையில் தெரிந்தது. இதைத் தொடா்ந்து, அவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா். இதுபோல, துறையூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினா் பச்சமலை பகுதியில் நடத்திய சோதனையில், புத்தூரைச் சோ்ந்த மணிகண்டன் தனது வயலில் போட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலையும், 10 லிட்டா் கள்ளச் சாராயத்தையும் கைப்பற்றினா். மேலும் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை நடந்த சாராய வேட்டையின்போது மொத்தம் 82 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 534 லிட்டர் சாராயம், 2,086 லிட்டர் சாராய ஊறல், 117 லிட்டர் கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 23 இருசக்கர வாகனங்களும், 3 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.