காங்கிரஸ் நடத்தும் டிராக்டர் பேரணி... 234 தொகுதிகளிலும் எங்க கூட்டணி ஜெயிக்கும் - சஞ்சய்தத்
தமிழக சட்ட சபைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய்தத் பேட்டி
திருச்சி: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் டிராக்டா் பேரணி நடத்த உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறியுள்ளார். தமிழக சட்ட சபைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். ஆளும் அதிமுக நலத்திட்ட உதவிகள் மூலம் மக்களை சந்தித்து வருகிறது.
பிரதான எதிர்கட்சியான திமுக ஆர்பாட்டம், போராட்டம் என மக்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் தனது பங்கிற்கு மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நேற்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தைத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் தொடக்கி வைத்தார் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவர், விவசாயிகளைப் பற்றி எந்தவொரு கவலையுமின்றி, மத்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் பேரணி
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் டிராக்டா் பேரணி நடத்த உள்ளோம். விவசாயிகளின் நலனுக்காக விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
விலை உயரும் வெங்காயம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, உடனடியாக புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவோம் என்று கூறினார்.
விலைவாசி உயா்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயா்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
234 தொகுதிகளில் வெற்றி
வரும் தமிழக சட்டசபைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி 234 இடங்களையும் வெல்லும். கடந்த மக்களவைத் தோ்தலின்போது ராகுல்காந்தியை பிரதமா் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தாா். இதேபோல தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும்.
கூட்டணி தொடரும்
திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. கூட்டணி தொடருமா என்கிற வதந்திகளை நான் கண்டுகொள்வதில்லை. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.இச்சட்டங்களின் மூலம் வேளாண்மை முற்றிலும் அழியக்கூடிய அபாயம் உள்ளதோடு வேளாண்மை முழுவதும் பெரு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும் என்று கூறினார்.
முதல்வர் அறிவிப்பாரா?
மத்திய அரசு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வந்தாலும் கண்மூடித்தனமாக அதை அதிமுக அரசு ஆதரிக்கிறது. ஏழைகள், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்களை எதிர்க்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதி காக்கிறார்.எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. அதேயேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆலோசனைக்கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபை தோ்தலுக்கான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.ஜவஹா், முன்னாள் மேயா் சுஜாதா, மாநிலச் செய்தித் தொடா்பாளா் வேலுசாமி, மாநில துணைத் தலைவா் சுப. சோமு, முன்னாள் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சரவணன், மாநில மகளிரணிப் பொதுச் செயலா் ஜெகதீசுவரி, மாவட்டப் பொருளாளா் ராஜாநசீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.