இலங்கையில் நடந்தது இனப்படுகொலை.. வேண்டுவது பொதுவாக்கெடுப்பு.. கல்லூரி விழாவில் கர்ஜித்த வைகோ
திருச்சி: இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழ் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் ஞா.லெயோனார்டு தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் அந்தோனி பாப்புராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழாய்வுத் துறைத் தலைவர் பி. செல்வக்குமாரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ம. ஆரோக்கியசாமி சேவியர் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கிறிஸ்தவமும், தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சமய கருத்துகள் பரப்புரை
அப்போது அவர் பேசியதாவது: கிறித்தவமும், தமிழும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. இயேசு சபையைச் சேர்ந்த குருமார்கள் பலரும் தமிழகத்துக்கு தங்களது சமய கருத்துகளை பகிருவதற்காகவே வந்தனர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று, பல மொழிகளை கற்றறிந்த அந்த குருமார்கள் தமிழ் மொழியின் சிறப்பைப் போன்று, வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பதை உணர்ந்து தமிழ்ப் பணிக்கு அதிக நேரம் செலவிட்டனர்.
வீரமாமுனிவரின் நூல்கள்
இத்தாலி நாட்டில் பிறந்து நம்மால் வீரமாமுனிவர் என அழைக்கப்படும் ஜோசப் பெஸ்கியே அதற்கு சிறந்த சான்று. வீரமாமுனிவர் தமிழகம் வந்து, தமிழ் மொழி பயின்று 36 நூல்களை எழுதியுள்ளார். அதில், 23 நூல்களை தமிழில் எழுதியுள்ளார். இதுமட்டும் அல்லாது கம்பன் காவியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்தில் வரும் பாடல்களை போன்று வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி என்ற பெருங்காவியத்தில் பல பாடல்களை உணர்ச்சி ததும்ப படைத்துள்ளார்.
தமிழ் தான் மூத்த மொழி
ஆங்கிலம், பிரஞ்ச், லத்தீன், கிரேக்கம், மலையாளம் என பல்வேறு மொழிகளை அறிந்தவராக இருந்தாலும் தமிழ் மொழிதான் உலகின் மூத்த மொழி என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழ் இலக்கியங்களைப் படைத்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர். இலக்கியம் தவிர்த்து பரமார்த்த குருவும், சீடர்களும் என்ற கதையும் இன்றைய கால சிறார்களையும் கவர்ந்திழுப்பதாகும்.
கல்வி புகட்டினர்
தமிழகத்துக்கு வந்த கிறித்துவர்கள் தமிழ்த் தொண்டு மட்டும் ஆற்றவில்லை. சாதி, மதங்களைக் கடந்து ஏழை, எளிய, வசதியில்லாதவர்களுக்காக கல்வியறிவு அளித்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இயேசு சபைகள் நிறுவிய கல்விக் கூடங்களே தமிழகத்தில் கல்வியறிவு வளர்வதற்கு அன்றும், இன்றும் பெரும்பங்காற்றி வருகின்றன.
சக்திமிக்கவர்கள் மாணவர்கள்
மாணவர்களின் சக்தி அளப்பரியது. இன்றைய வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்றொரு நாடு கிடையாது. இந்து என்ற சொல் பழைய தமிழ் இலக்கியங்கள் எதிலும் கிடையாது. உலகில் 125 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லை.
கொடூரம் செய்த சிங்கள ராணுவம்
இலங்கையில் சிங்கள நாடு வேறு, தமிழ் நாடு வேறு, சிங்கள இனம் வேறு, தமிழர் இனம் வேறு. தனித்தனியாக இருந்த இரு நாடுகளை ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து வெளியேறும் போது ஓர் ஒப்பந்தம் போட்டு ஒன்றாக இணைத்து, தமிழ் மக்களை சிங்களர்களுக்கு அடிமையாக்கிவிட்டு சென்று விட்டனர். ஹிட்லர் கூட செய்ய தயங்கிய கொடூரங்களை சிங்கள ராணுவம் அரங்கேற்றியுள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை
ஹேசிமின், சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ வரிசையில் போர் நடத்திய பிரபாகரனும் அழிக்கப்பட்டார். இது ஒரு இனப்படுகொலை. இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று வைகோ பேசினார்.