நாங்கள் லெட்டர்பேடு கட்சியா?.. விமர்சிப்பவர்களுக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்
Recommended Video
திருச்சி: தேர்தல் தோல்வி எதிரொலியாக, அமமுக - வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், விலகிய அனைவரும் தங்களது கட்சிக்கு மீண்டும் வந்து விடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக முக்கிய நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதே போல் பல நிர்வாகிகள் அதிமுகவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக அணியில் தங்க தமிழ்ச் செல்வன் இணைய உள்ளதாக தகவல் பரவியது. அதே சமயம், அவருக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் வரவேற்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
தகவல் உண்மையில்லை
இந்தநிலையில், அதிமுகவில் நான் இணைய உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார். சிலர் வேண்டுமென்றே, இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
துணிச்சலுடன் போராடுவோம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழர்களின் உரிமைக்காக பாதுகாப்பிற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்தவொரு சக்தியையும் துணிச்சலுடன் எதிர்த்து போராடும் என்று கூறினார்.
லெட்டர்பேடு கட்சி?
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களை லெட்டர்பேடு கட்சி என்று விமர்சிப்பவர்கள், எங்களது கட்சியினரை பொய் சொல்லி, ஏமாற்றி அவர்களது கட்சியில் இணைக்கின்றனர், ஆனால் அவர்களும் மீண்டும் எங்களது கட்சிக்கு வந்து விடுகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், 30 ஆண்டுகளுக்குப் பின் மாபெரும் குடிநீர் பஞ்சம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தலைதூக்க விடமாட்டோம்
முன்னதாக, தமிழகத்தில் எந்த ஒரு மதவாதமும் தலைதூக்க விடமாட்டோம். இங்கு வாழும் அனைத்து சகோதர, சகோதரிகளும் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக வாழவும், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறவும் அமமுக போராடும் என்றார். இதற்கிடையில், டிடிவி தினகரன் சொல்லும் சிலீப்பர் செல்கள் வேலையை தொடங்கி விட்டார்கள் என்றும், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, திரும்பியவுடன் பல்வேறு திருப்பங்கள் இருக்கும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கிசுகிசுத்து வருகின்றனர்.