ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்... களத்திற்கு வந்த அமமுக நிர்வாகிகள்
திருச்சி: ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு அமமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் விநியோகம் செய்யப்பட்டன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் லட்சக்கணக்கான தினக்கூலிகள் வருவாய் இழந்து அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக திமுகவினர் ஏற்கனவே முழு வீச்சில் நிவாரண உதவிகளை வழங்கு வரும் நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளும் இப்போது களத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி, நடுப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் அமமுக நிர்வாகியும் வழக்கறிஞருமான துளசி, அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கினார். மேலும், துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை அவர் விநியோகித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மனிதநேயத்துடன் தாங்கள் இந்த நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகவும், தங்களால் இயன்ற வரை நிவாரண உதவிகள் தொடரும் எனவும் கூறுகிறார் அமமுக நிர்வாகி என்.எஸ்.என்.அப்துல்லா. இதனிடையே தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பது மனிதம் மரக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.