Exclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்
திருச்சி: அமமுகவில் இருந்து ஒரு சிலர் வெளியேறியதால் கட்சியின் கட்டமைப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், தனிப்பட்ட காரணத்திற்காக செல்கிறவர்களை பிடித்து வைக்க முடியாது எனவும் அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் சாருபாலா தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
இவை உட்பட காங்கிரஸில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களையும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
கேள்வி : அமமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதற்கு என்ன காரணம்?
பதில்: தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் சிலர் சென்றிருக்கிறார்கள். அதற்காக கட்சி செயல்பாடுகளில் தொய்வெல்லாம் ஏற்படவில்லை. அண்மையில் கூட எங்கத் தலைவர் டிடிவி தேனியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அங்கு பார்த்தீர்கள் என்றால் நல்ல கூட்டம் வந்திருந்தது. தங்க.தமிழ்ச்செல்வன் சென்றுவிட்டார் என்பதற்காக அங்கு யாருமே வராமலா இருந்தார்கள். தனிப்பட்ட காரணத்திற்காக போகிறவர்களை பிடித்து வைக்க முடியாது
கேள்வி: சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாவார் எனக் கூறப்படுகிறதே, அப்படி நடந்தால் அமமுகவின் போக்கு எப்படி இருக்கும்?
பதில்: இதெல்லாம் ஹேஷ்யம்..இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
கேள்வி: காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் வெளியேறினோம் என என்றாவது வருத்தப்பட்டது உண்டா?
பதில்: ஒரு வருத்தமும் இல்லை..நான் சொல்கிறேன் தமிழகத்தில் எந்தக்காலத்திலும் காங்கிரஸ் பிக் அப் ஆகாது. காங்கிரஸ் என்றாலே கோஷ்டிப்பூசல் தான். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே இங்கு இருக்கும் தலைவர்கள் தான், யாரும் யாரையும் வளரவிடமாட்டார்கள். ஒருத்தரை ஒருவர் தலைமையிடம் குறைக்கூறிக்கொண்டே இருப்பார்கள். அதனால், காங்கிரஸில் இருந்து வெளியேறியதால் எனக்கு எப்போதும் வருத்தமில்லை.
கேள்வி: திருச்சி தொகுதியில் 3 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளீர்கள்...இதற்கான காரணத்தை ஆராய்ந்தீர்களா?
பதில்: தேர்தலில் தோல்வியடைந்ததற்காக நான் எதற்கு கவலைப்பட வேண்டும், மக்கள் தான் என்னை வெற்றிபெற வைக்காததற்கு கவலைப்படனும். அந்தளவுக்கு திருச்சி மேயராக இருந்தபோது பார்த்து பார்த்து பல திட்டங்களை திருச்சி மக்களுக்கு செய்திருக்கிறேன். யாராவது என்மேல் எந்த ஊழல் குற்றச்சாட்டையாவது சொல்லமுடியுமா? எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தேன். கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு அளித்த வாக்குகள் திருடப்பட்டுள்ளன. தேர்தல் தோல்வி எனக்கான நஷ்டமல்ல, மக்களுக்குத்தான் நஷ்டம்.
கேள்வி: முன்னாள் அமைச்சர் நேருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?
பதில்: கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டேன். கூட்டணி கட்சியினர் சரியாக வேலை செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் நேருவுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை கிடையாது. அவரை எங்கு சந்தித்தாலும் பேசுவேன். 2009 தோல்விக்கு நேரு தான் காரணம் எனக் குறிப்பிட்டு சொல்லவில்லை. காங்கிரஸில் இருந்து முக்கியமான ஆட்கள் வெற்றிபெற்று பவர்சென்டர் ஆகக் கூடாது என அப்போது திமுக நினைத்தது. அதன்படி நான் தோற்கடிக்கப்பட்டேன். கூட்டணி அமைத்துவிட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளரை தோற்கடிப்பது தானே திமுகவின் வழக்கமே.
கேள்வி: காங்கிரஸ்..த.மா.கா...அதிமுக..அமமுக என அடுத்தடுத்து கட்சி மாறியது ஏன்? என்ன காரணம்?
பதில்: காங்கிரஸில் இருந்தபோதே அம்மாவிடம் இருந்து அதிமுகவில் சேருமாறு அழைப்பு வந்தது. ஆனால் நான் செல்லவில்லை. ஜி.கே.வாசன் என்னை மேயர் ஆக்கினார் என்பதற்காக உடனடியாக நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் த.மா.கா.வை ஜி.கே.வாசன் முறையாக நடத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைய மனம் வரவில்லை. அதனால் அம்மாவின் அழைப்பை ஏற்று அதிமுகவில் இணைந்தேன். அவர் மறைவுக்கு பின்னர் நடந்தது தான் தெரியுமே, இப்போது அமமுகவில் இருக்கிறேன்.