திருச்சி அருகே குடித்துவிட்டு கோயிலில் தூங்கிய போதை ஆசாமி.. தட்டிக்கேட்ட மூதாட்டி படுகொலை
திருச்சி: மது போதையில் கோயிலில் தூங்கியதை தட்டிக் கேட்ட மூதாட்டியை போதை ஆசாமி அடித்துக் கொலை செய்த சம்பவம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அருகே கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் வாழ்ந்து வந்தவர் 75வயதான பழனியம்மாள். இவரது கணவர் இளம் வயதிலேயே உயிரிழந்துவிட்டார். தனது ஒரே மகளை பழனியம்மாள் திருமணம் முடித்து வைத்துவிட்டு அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.
பழனியம்மாள் வீட்டின் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தி, வாசலில் கோலம் போடுவது போன்ற இறை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மன் கோயில் முன் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் தூங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 57வயதான அந்தோணிசாமி மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்தார் இது தொடர்பாக கோவண்டாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கல்லக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின், பேரில் போலீஸார் அந்தோணிசாமியை கைது செய்து விசாரித்தனர்,
உத்தரப்பிரதேசம்: துப்பாக்கியால் கொன்ற நபரை போலீஸார் கண்முன்னே கடுமையாக தாக்கிய கிராம மக்கள்
அப்போது அந்தோணிசாமி கூறுகையில், எனக்கு நீண்ட காலமாக மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால் என்னை விட்டு மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டார்கள். நான் மாரியம்மன் கோயிலின் முன் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது என்னை மூதாட்டி பழனியம்மாள் திட்டியதால் ஆத்திரம் வந்தது. அப்போது மதுபோதையில் இருந்த நான் கட்டையால் அடித்துக் கொலை செய்தேன் என்றார். கொலையை ஒப்புக் கொண்டதால் அவர் மீது கல்லக்குடி போலீஸார் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.