கொரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள்... காணொலி மூலம் வேலைவாய்ப்பு முகாம்... அன்பில் மகேஷ் புது முயற்சி..!
திருச்சி: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பலரும் வேலையிழந்து தவித்து வரும் சூழலில் காணொலி காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.
நாளை மறுதினம் 10-ம் தேதியன்று நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 4,000 பேருக்கு பணி கிடைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி பேதங்களை கடந்து முழுக்க முழுக்க திறமை, தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணித்தேர்வு நடைபெறவுள்ளது.
அன்பில் மகேஷ்
திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது அன்பில் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவர் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் குறைந்தது 7,000 இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். அதில் திருச்சி மாவட்ட இளைஞர்கள் மட்டுமல்லாமல் அருகாமை மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும், பட்டதாரிகளும் அடங்குவர்.
காணொலி மூலம்
இதனிடையே கொரோனா ஊரடங்கால் பல தொழில்நிறுவனங்கள் நலிவடைந்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கை தூக்கி விடும் புதிய முயற்சியாக கொரோனா பேரிடரிலும் காணொலி காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார் அன்பில் மகேஷ். கட்சி பேதங்களை கடந்து முழுக்க முழுக்க திறமை, தகுதியின் அடிப்படையில் பணித்தேர்வு நடைபெறவுள்ளது.
4,000 பணியிடங்கள்
நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 4,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் ரிலையன்ஸ், சிண்டர் எலக்ட்ரிக், லைஃப்ஸ்டைல், ஐ.டி.பி.ஐ. வங்கி, பேரிவேர், டி.வி.எஸ். குழுமம், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பல பங்கேற்றிருக்கின்றன. 10-வது படித்தவர்கள் முதல் பி.இ. படித்தவர்கள் வரை இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
ஆர்வம்
அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியை கொண்டு முன்னெடுத்துள்ள இந்த முயற்சியை ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் முன்னெடுத்து தங்கள் பகுதி இளைஞர்களுக்கு அவர்களது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அது காலத்தால் அழியாத புகழை சேர்க்கும்.