நிற்கதியாக நின்ற மூதாட்டி... சொந்தப்பணத்தை தந்துதவிய அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மூதாட்டி ஒருவர் தீ விபத்தில் வீட்டை இழந்து நிற்கதியாக நின்ற நிலையில், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அந்த தொகுதி எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் மூதாட்டிக்கு தனது சொந்தப்பணத்தை கொடுத்து உதவினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட காட்டூரில் உள்ள காந்திநகரில், சுப்புலட்சுமி என்ற மூதாட்டி குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொல்லிக்குள்ளும் வகையில் யாரும் உறவினர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுப்புலட்சுமியின் குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்ததில் அவருடைய உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே தங்க இடமின்றி, உடைமைகளை இழந்து அழுது புலம்பியிருக்கிறார் சுப்புலட்சுமி.
இந்த தகவலை காட்டூர் பகுதி திமுகவினர், தொகுதி எம்.எல்.ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து சென்னை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுவிட்டு திருச்சி திரும்பிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக அந்த மூதாட்டியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து கேட்டறிந்த அவர், அரசு சார்பில் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். நிகழ்விடத்தில் இருந்தே அரசு அதிகாரிகளை அழைத்து சம்பவத்தை சொல்லி அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்காலிக உதவியாக உணவுக்கும், உடைக்கும் தனது சொந்தப்பணத்தை பாதிக்கப்பட்ட மூதாட்டி சுப்புலட்சுமியை அழைத்து கொடுத்தார். இதில் நெகிழ்ந்துபோன அந்த மூதாட்டி சுப்புலட்சுமி அன்பில் மகேஷை கண்களில் கண்ணீர் பெருக வாழ்த்தி நன்றி கூறினார். மேலும், வீட்டை சீரமைக்கும் வரை அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு அங்கிருந்த திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார். இதனிடையே தனது தொகுதி மட்டுமன்றி தனது நிர்வாகத்திற்குட்பட்ட தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தவறாமல் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.