5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில்... அன்பில் மகேஷ் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்..!
திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார்.
திருவெறும்பூர் பகுதி இளைஞர்களும், பட்டதாரிகளும், பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறையாவது அன்பில் அறக்கட்டளை மூலமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் தகுதியும், திறமையும் மிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் நல்ல பணியில் அமர்ந்திருக்கிறார்கள்.
கட்சி சார்பற்ற முறையில் முழுக்க முழுக்க தனது தொகுதிக்குட்பட்ட பட்டதாரிகளுக்காக, இளைஞர்களுக்காக நடத்தும் இந்த வேலை வாய்ப்பு முகாமில், பே.டி.எம், டெக் மஹேந்திரா, ஃபாக்ஸ்கான், டிவிஎஸ் குழுமம் என நூறு முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் எஸ்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் இந்த நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புவோர் அன்பில் அறக்கட்டளை இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் இது குறித்து கூறும் அன்பில் மகேஷ் ஆதரவாளர் முரளிகிருஷ்ணா, '' அண்ணனை பொறுத்தவரை எந்த ஒரு செயலும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என நினைப்பார். கடமைக்கு காரியமாற்றுவது அவருக்கு பிடிக்காது. தொகுதியை சேர்ந்தவர்கள் யாரேனும் ஒரு கோரிக்கை விடுத்தால் கூட, பிரஸ்டீஜ் பார்க்காமல் தாசில்தார், வி.ஏ.ஓ. வரை நேரடியாக சென்று முறையிட்டு தீர்வு பெற்றுக் கொடுப்பார்.''
''இது அவரை அருகில் இருந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இதனிடையே இப்போது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் கூட கொரோனாவால் வேலையிழந்த இளைஞர்களுக்காக தான்.'' எனத் தெரிவிக்கிறார்.