மணிகண்டன், சுரேஷ் தாயாருக்கு அக். 18 வரை சிறை.. விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முரண்டு..!
குற்றவாளி சுரேஷின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
திருச்சி: "என்னை வெட்டி கொன்னு போட்டாலும் சரி.. என் வாயில் இருந்து எந்த விஷயமும் உங்களுக்கு கிடைக்காது" என்று கொள்ளையன் மணிகண்டன் சொல்லி வருவதாக சொல்லி வந்த நிலையில், இன்று மணிகண்டனையும், சுரேஷின் தாயார் கனகவள்ளியையும் போலீசார் திருச்சி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் 18-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லலிதா ஜூவல்லரி கொள்ளையில் 5 கிலோ தங்க நகையுடன் பிடிபட்டவன் மணிகண்டன். சப்-இன்ஸ்பெக்டர் பாரத் நேருதான் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று இவரை பிடித்தார்.
இவரை பிடித்ததும் எப்படியும் எல்லா உண்மைகளும் வெளியாகும் என்றும், மூளையாக செயல்பட்ட முருகன் கைதாவான் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்பெஷலிஸ்ட்
ஆனால், மாஸ்க் வாங்கியது ஒரு பேன்சி ஸ்டோரில், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது முருகன், எங்க முருகன் சுவற்றில் ஓட்டை போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் , வேனுக்குள்ளேயேதான் அவர் வாழ்க்கை. கயிறு மூலம் சிக்னல் கொடுத்து கொள்ளை அடித்தோம், செல்போன் பயன்படுத்தவில்லை இப்படிப்பட்ட க்ளூக்கள்தான் இதுவரை கிடைத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.
மணிகண்டன்
ஆனால், இப்போதுவரை மணிகண்டன் போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்கிறார்கள். பெரிசா ஒரு தகவலையும் மணிகண்டன் சொல்லவில்லையாம். இதைவிட பெரிய சமாச்சாரம் இந்த மணிகண்டன் அதிமுக வார்டு அவைத் தலைவர் ஒருவரின் மகனாம். இந்த குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்தபோது, சுரேஷ்தான் உதவி இருக்கான். சுரேஷ் மூலம்தான் முருகன் அறிமுகம் ஆகி இருக்கிறான். அதனால் நிறைய விஷயம் வெளியே வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதுவுமே சொல்லாமல் முரண்டு பிடித்து வந்ததாகவும் தெரியவந்தது.
தெரியாது
எப்போது போலீஸ் லலிதா ஜுவல்லரி கொள்ளையை பற்றி கேட்டாலும், "சுரேஷ் என் ஃபிரண்ட், தஞ்சாவூரிலிருந்து வர்றேன்.. என்னை பைக்கில் வந்து பிக்கப் பண்ணிட்டு போன்னு சொன்னான். அதான் நீடாமங்கலம் போய் அவனை பைக்கில் கூட்டி வந்தேன். எனக்கு எதுவும் தெரியாது. என்னை நீங்க கொன்னு போட்டாலும் சரி, என் கிட்ட இருந்து ஒரு விஷயமும் வராது" என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஒத்துழைப்பு இல்லை
அதனால்தான் கைதாகி 3-வது நாள் ஆகியும் ஒரு தகவலையும் மணிகண்டனிடம் இருந்து வாங்கமுடியாமல் கையை பிசைந்துள்ளதாக கூறப்படுகிறது. எதை சொன்னாலும், முருகனின் ஆட்கள் தம்மை வந்து போட்டு தள்ளிவிடுவார்கள் என்பது மணிகண்டனுக்கு 100 சதவீதம் தெரிந்திருக்கிறது போலும்!
கனகவள்ளி
அதனால்தான் எதையும் சொல்லாமல் விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் உள்ளதாக தெரிகிறது. இந்த கொள்ளை விவகாரத்தில் மணிகண்டன், சுரேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக 3-வது முக்கிய குற்றவாளியாக சுரேஷின் தாயார் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கைது
இன்று காலையும், முருகனின் அக்காவும் சுரேஷின் தாயாருமான கனகவள்ளி, உள்ளிட்ட உறவுக்காரர்கள் நண்பர்கள் என 8 பேரை தூக்கிவந்து போலீசார் விசாரித்தனர். அப்போதும் இவர்கள் யாருமே எந்த விஷயத்தையும் கக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து, சுரேஷ், மற்றும் கனகவள்ளியை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி கோர்ட் நீதிபதி வீட்டில் இருவரையும் ஆஜர்படுத்தியது போலீஸ். இதையடுத்து, சுரேஷ், கனவள்ளி இருவரையும் 18ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.