சிஏஏவுக்கு எதிர்ப்பு.. திருச்சியில் இஸ்லாமியா்கள் விடிய விடிய போராட்டம்
Recommended Video
திருச்சி: திருச்சியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2ஆவது நாளாக இஸ்லாமியா்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக திருச்சியில் தென்னூா் உழவா்சந்தை மைதானத்தில் இஸ்லாமிய இளைஞா்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் தங்களது செல்லிடப்பேசி விளக்குகளை ஒளிரவிட்டப்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.அவர்கள் அங்கு கொட்டும் பனியையும் பொருட் படுத்தாது விடிய விடிய அமர்ந்து இருந்தனர்.
முன்னதாக, திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையா் என்.எஸ். நிஷா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை.
தொடா்ந்து 2ஆவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள், கல்லூரி மாணவா்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனா். மேலும், இஸ்லாமிய அமைப்புகள், சில அரசியல் கட்சியினா் போராட்டக்காரா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
இந்த போராட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேய கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு பாடல்களையும் இசையுடன் பாடினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேசினார்கள்.
மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவா்கள் தெரிவித்து இருப்பதால் மாநகா் பகுதியில் 400க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.