பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு
Recommended Video
திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டி உள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
திருவள்ளுவர் உருவப்படத்திற்கு விபூதி பூசி, காவி நிற உடை உடுத்தி ஒரு புகைப்படத்தை பாஜக சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென இரு நாட்கள் முன்பாக, பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சிலர், சாணத்தை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் வாசனை தட்டி கொடுத்து ரொம்ப நேரம் பேசிய மோடி.. இன்று டெல்லியில் இருவரும் அதிரடி சந்திப்பு!
நடவடிக்கை
சாணம் வீசிய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று, மாநில அரசுக்கு, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் இதே கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில், கட்சி, நிர்வாகிகள் குறிப்பிட்ட இந்த திருவள்ளுவர் சிலைக்கு நேற்று பாலாபிஷேகம் செய்து சுத்தப்படுத்தினார்.
ருத்ராட்ச மாலை
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு இன்று திடீரென வந்து தான் மறைத்து வைத்திருந்த ருத்ராட்ச மாலையை திருவள்ளுவர் சிலைக்கு அணிவித்தார். பிறகு காவி துண்டை சிலையின் தோள் பகுதியில் அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.
ராஜராஜ சோழன் சதய விழா
பின்னர் இந்த தீபாராதனையை அங்கு கூடியிருந்த இந்து மக்கள் கட்சியினர் தொட்டு கும்பிட்டனர். இந்து கடவுள் வழிபாடு போலவே அங்கு ஒரு வழிபாடு நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடைபெற்று வரும் ராஜராஜ சோழன், சதய விழாவில் பங்கேற்பதற்காக அர்ஜுன் சம்பத் அங்கு வருகை தந்திருந்தார். இந்த நிலையில்தான் திடீரென அவர் பிள்ளையார்பட்டிக்கு சென்று திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, பூஜை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
பேட்டி
இதுபற்றி அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், பசும்பொன் தேவர் போன்றோர், திருவள்ளுவரை, நாயன்மார் வரிசையில் வைத்து பார்த்தனர். தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் திருவள்ளுவருக்கு கோவில் உள்ளது. எனவே, திருவள்ளுவருக்கு இந்து முறைப்படி பூஜை செய்வது சரியானதாகும் என்றார்.