ஒரே நேரத்தில் 2 அத்திவரதர்.. காஞ்சியில் ஒன்னு.. திருச்சியில் இன்னொன்னு.. மக்களுக்கு டபுள் சந்தோஷம்!
திருச்சி: தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2 அத்திவரதர் தரிசனம் தந்துள்ளார். இதனால் பக்தர்கள் ஏராளமான மகிழ்ச்சியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் சேவை தற்போது நடைபெற்று வருகிறது.
விடிகாலை 3 மணி முதலே கூட்டம் முண்டியக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் ஒருநாளைக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள்.
எத்தனையோ பேர், நெரிசல் காரணமாக அத்திவரதரை தரிசிக்க முடியாமல், கோயில் வரை சென்று ஊர் திரும்பும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, அத்திவரதரை தரிசிக்க இயலாதவர்களுக்கு திருச்சியில் அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.
ஆம்.. திருச்சி பெரிய கடை வீதியில் ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ரொம்ப பிரசித்தி பெற்றது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.. இந்த கோயிலில்தான் அத்திவரதர் தரிசித்துள்ளார். கடந்த 3 நாட்களாக சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நின்றகோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்.
இதனால் அத்திரவரதரை காண ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2 அத்திவரதரின் தரிசனம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.