அதிர்ச்சியில் அதிமுக.. வேட்பாளர் சுந்தரவள்ளி மாமனார் கழுத்தை நெரித்த கும்பல்.. திகிலில் திருச்சி!
திருச்சி அதிமுக வேட்பாளர் மாமனார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
திருச்சி: கதவை தட்டி.. மிளகாய் தூளை முகத்தில் கொட்டி.. கழுத்தை நெரித்து.. அதிமுக வேட்பாளர் சுந்தரவள்ளியின் மாமனாரை கொல்ல முயன்றுள்ளது ஒரு மர்ம கும்பல்.. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்துள்ள பகுதி மேற்குகல்பட்டி.. இங்கு வசித்து வருபவர் ஸ்ரீரங்கன்.. 63 வயதாகிறது.. அதிமுக பிரமுகர்.. இவருடைய மகன் ராமசாமி - மருமகள் சுந்தரவள்ளி, 32 வயதாகிறது!
இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் வையம்பட்டி ஒன்றியத்தின் 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சுந்தரவள்ளி களம் இறங்குகிறார்.. மருமகளுக்கு ஆதரவாக மாமனாரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, ஸ்ரீரங்கன் வீட்டில் வந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டதும், ஸ்ரீரங்கன் எழுந்து போய் கதவை திறந்தார். யார் என்று பார்ப்பதற்குள் ஒரு மர்மகும்பல் ஸ்ரீரங்கனின் முகத்தில் மிளகாய் தூளை கொட்டியது.. பிறகு அவருடைய கழுத்தை கயிற்றால் நெரித்து இறுக்கி கொல்ல முயன்றது.
அதற்குள் வீட்டில் இருந்த நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிட்டன.. இந்த சத்தம் கேட்டதும் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து ஓடிவந்தனர்.. அதற்குள் கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து படுகாயமடைந்த ஸ்ரீரங்கனை குடும்பத்தினர் மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
பேசாம வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. உதயநிதியை அசரடித்த நாராயணப்பா தாத்தா!
இந்த கொலை முயற்சி குறித்து வையம்பட்டி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வந்தவர்கள் யார், எதற்காக தாக்கினார்கள், தேர்தல் போட்டி காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்றெல்லாம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அதிமுக வேட்பாளரின் மாமனாரை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.