பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வலியுறுத்தல்
Recommended Video
திருச்சி: காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை 'டிஸ்மிஸ்' செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பகுதியான இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவ மழை மற்றும் கோடை மழை தமிழகத்துக்கு பெரிய அளவில் கைகொடுக்காததால் இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜுன் 12ம் தேதி திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற சூழல் நிலவுகிறது. அதேநேரம் கர்நாடகாவும் தண்ணீர் திறக்கவில்லை.
ஓய்வறியாய் சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்!
இதனால் போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பழனிவேல், துணை தலைவர் கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரூ.6 ஆயிரம் பணம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கோதாவரி- காவிரி நதிகள் இணைக்கப்படும் என்று அறிவித்ததற்கும், சிறு குறு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதற்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
காவிரியில் நீர்
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. மாதா மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை வழங்கவில்லை. விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை.
டிஸ்மிஸ் செய்யுங்க
இம்மாத இறுதிக்குள் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறோம். அப்போது காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ‘டிஸ்மிஸ்' செய்யவேண்டும் என கோரிக்கை வைப்போம். அவர்கள் எங்களை சந்திக்க மறுத்தாலோ, கோரிக்கையை ஏற்கவில்லை என்றாலோ டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
சேலம் எட்டுவழிச்சாலை
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த இடுக்கி மாவட்டம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளாவிற்கு சென்று விட்டது. இடுக்கி மாவட்டத்தில் தான் மழை நன்றாக பெய்கிறது. இந்த தண்ணீர் வளத்தை நாம் பெறுவதற்காக எல்லை கல்லை மாற்றி நடவேண்டும். இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்ததை அமல்படுத்த தீவிரம் காட்டினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.