மாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை
திருச்சி: திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் வாசலிலே சிவப்பு பட்டு உடுத்திய அழகு பெண் 'ரோபோ, வாடிக்கையாளா்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒருகையில் சானிடைசரும், மறு கையில் வரவேற்பு பலகையும் வைத்துக்கொண்டு வரவேற்கிறது.
கொரோனா பொதுமுடக்கத்தால் கட்டுப்பாடுகளுடன் பெரிய ஜவுளி கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பயத்தால் மக்கள் முன்பு போல் கடைகளுக்கு வருவது இல்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்து புதுப்புது ஐடியாக்களை நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.
அந்த வகையில், திருச்சி மேலரண் சாலையில் செயல்படும் சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளா்களை கூடுதலாக கவரும் வகையில் பெண் ரோபோ மூலம் கிருமி நாசினி மருந்து வழங்கி வருகிறது.
கிருமி நாசினி இயந்திரம்
ஜவுளி கடையின் தரைத்தளத்தில் உள்ள ரோபோவானது வாடிக்கையாளா்களை இன்முகத்துடன் வரவேற்கிறது. முன்பு பெண் தான் இதை செய்து வந்தார்கள். ஆனால் இப்போது ரோபா செய்வதை பார்த்து மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். அதுவும் அந்த ரோபோ ஒரு கையில் சென்னை சில்க்ஸ் தங்களை வரவேற்கிறது என்னும் பதாகையுடன், வரவேற்பு ஒலிக்கச் செய்யப்படுகிறது. மற்றொரு கையில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் உள்ளது.
வாடிக்கையாளர்கள் வரவேற்பு
இந்த இயந்திரத்தின் முன் வாடிக்கையாளா்கள் தங்களது கைகளை நீட்டியவுடன் கிருமி நாசினி திரவம் பெறப்படும். அதைக் கொண்டு சுத்தம் செய்த பிறகு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகின்றனா். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவும் என்பதால் ரோபோவை வைத்து சானிடைசர் தரப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
சேலைகளை காட்டப்போகுது
இதனால் கூடுதல் ரோபோ சேவைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களுக்கு கடையில் உள்ள பொருள்கள், பிரிவுகளை விளக்கிக் கூறி வரவேற்கும் வகையில் இந்தச் சேவையை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. போற போக்கை பார்த்தால் மனிதனுக்கு பதில் ரோபோக்கள் தான் பல பணிகளை செய்யப்போகின்றன என்பது மட்டும் தெரிகிறது.
தமிழகம் முன்னோடி
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தில் நம்மூர் மக்கள் முன்னோடியாகவே இருக்கிறார்கள். ஜவுளிக்கடைகளில் பயன்படுத்தப்படும் இந்த ரோபோ தொழில்நுட்பங்களை பார்த்து வடநாட்டினர் வாயடைத்து போய் உள்ளனர். கடந்த மாதம் இதை பற்றித்தான் ஒரே பேச்சாக இருந்தது. ஏற்கனவே ஓட்டல்களில் ரோபோக்களை பயன்படுத்தி உணவையும் நம் மக்கள் விநியோகித்து வருவதற்கும் வரவேற்பு அதிகமாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, ஏற்பது, அதை உலகிற்கு வழங்குவது நம்மவர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்கள்.