குடியரசு தினத்தில் விவசாயிகள் மீது பாஜக அரசு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்... கார்த்தி சிதம்பரம்
திருச்சி: குடியரசு தினத்தில் விவசாயிகள் மீது பாஜக அரசு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று மணப்பாறையில் சிவகங்கை லோக்சபா எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி. சத்தியமூா்த்தியை நேற்று சிவகங்கை லோக்சபா எம்பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த சம்பவங்களை பார்க்கும்போது உண்மையாகவே இது குடியரசு தினமா என சந்தேகம் எழுகிறது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் பேரணியாக வரும்போது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் போராடுபவர்களுடன் பேசி ஒருமுடிவெடுத்து இருக்க வேண்டும். 10 முறை பேசியும் விடாப்பிடியாக இருக்கின்ற பாஜக அரசு காட்டு மிராண்டித்தனமாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. 2019ம் ஆண்டு எம்பி தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.