பதற வைத்த திருச்சி சிறை பெண் வார்டன் தற்கொலை.. காதலர் உள்பட 3 பேருக்கு வலை
திருச்சி வார்டன் தற்கொலை விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி: கூடவே வேலை பார்த்த பெண் போலீசை காதலித்து மோசமும் செய்து, கடைசியில் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க தயாரான காதலன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்செல்விக்கு 23 வயது. இந்த இளம் வயதிலேயே திருச்சி பெண்கள் ஜெயிலில் வார்டனாக வேலை கிடைத்தது. இதனால் திருச்சி மத்திய சிறை வளாகத்திலேயே உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி வந்து வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நைட் டியூட்டி என்பதால் வேலைக்கு செல்வி வரவில்லை. நேரமாகியும் டியூட்டிக்கு வராததால் சக பணியாளர்கள் அவருக்கு போன் பண்ணினார்கள். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவும், நேராக செல்வியை தேடி வீட்டுக்கே வந்துவிட்டார்கள்.
தூக்கில் தொங்கினார்
ஆனால் எவ்வளவு முறை தட்டியும் கதவை திறக்காததால், சந்தேகப்பட்டு போலீசுக்கு போன் பண்ணினார்கள். உடனடியாக கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தால், பெட்ரூம் ஃபேனில் துப்பட்டாவில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் செந்தமிழ்செல்வி.
சாதி பெயர்
இதன்பிறகு உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார்கள். செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "திருச்சி மத்திய சிறை வார்டன் வெற்றிவேல்தான் எனது மகளை காதலித்து விட்டு ஏமாற்றிவிட்டார். வெற்றி வேலின் அண்ணன் கைலாசமும், அவரது மனைவி ராஜசுந்தரியும் எனது மகளிடம் சாதிபெயரை சொல்லி கடுமையாக திட்டி இருக்கிறார்கள். இதனால் மனவேதனை தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டார்" என்றார்.
விடுதலை சிறுத்தைகள்
இதனிடையே காதலனை கைது செய்ய கோரி, உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மற்றொரு புறம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் இரு இடங்களிலும் பதட்டம் ஏற்பட்டது.
நாளை கல்யாணம்
இந்த தற்கொலை குறித்து போலீசார் தரப்பில் சொல்லும்போது, "செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் ஒரு வருடமாக காதலித்துள்ளனர். இதற்கிடையில் வெற்றி வேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. 6-ம் தேதி அதாவது நாளைக்கு கல்யாணம்.
வேறு வேறு சமூகம்
வெற்றிவேலின் அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். வெற்றிவேலும், செந்தமிழ்செல்வியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால்தான் கல்யாணத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இது தெரிந்தும் வெற்றிவேல் செந்தமிழ்செல்வியை தொடர்ந்து காதலித்து ஏமாற்றி இருக்கிறார். இதனால்தான் மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்றார்.
3 பேர் மீது வழக்கு
இதையடுத்து, காதலன் வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி மீது செல்வியின் தந்தை செல்லப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெற்றிவேல் உள்பட 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் 3 பேருமே எஸ்கேப். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்பதால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாதி பிரச்சனை
காதல் விவகாரம் சாதி பிரச்சனையாக உருவெடுத்துள்ளது ஒரு பக்கமும், போலீசார் தொடர்ந்து தற்கொலைகளை நாடி செல்வது இன்னொரு பக்கமும் என தமிழகமே அதிர்ந்து போய் உள்ளது.