சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்!
காவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
திருச்சி: "ஆளுங்களை கை மாத்தி விடற வேலை இருக்கக்கூடாது.. 50 ரூபாய் வந்து குடுத்துடுங்க" என்று மணல் அள்ள லாரி ஓனர் ஒருவரிடம், வாய்கூசாமல் லஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ ஒன்று பற்றி கொண்டு எரிகிறது!
திருவெறும்பூர் அருகே கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதற்காக, லாரி உரிமையாளர் ஒருவரிடம் தாசில்தார் அண்ணாதுரை என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோ விவரம் இதுதான்:
உரிமையாளர்: சார்.. அன்னைக்கு பாக்க வந்தேன்
தாசில்தார்: பாக்கறேன்.. பாக்கறேன்னு சொல்லிட்டு இப்படியே ஓட்டிட்டு இருக்க வேண்டியதுதான்.
உரிமையாளர்: இல்லை சார்.. நீங்க சொல்லுங்க சார், நான் பண்ணிடறேன்.. தீபாவளி வரைக்கும் 2 லாரி ஓட்டிக்கறேன் சார்.
தாசில்தார்: 50 ரூபாய் கொடுத்திடுங்க..
உரிமையாளர்: கொண்டு வரேன் சார்.
தாசில்தார்: ஆளுங்கள மாத்தி மாத்தி விட்டுட்டு இருக்கக்கூடாது.
உரிமையாளர்: இல்லை சார்.. நம்ம வண்டி 2 மட்டும்தான். வேற வண்டி எதுவும் வராது
தாசில்தார்: சரி.. சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு
உரிமையாளர்: கொடுத்திடறேன் சார்" என்று அந்த ஆடியோவில் பேசப்பட்டு உள்ளது
இந்த ஆடியோ விவகாரம் வைரலாகி அதிகாரிகள் மட்டத்தில் பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். அவருக்கு பதிலாக திருவெறும்பூர் புதிய தாசில்தாராக ரபீக் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.