திருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை!
சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் திருச்சியில் அக்டோபர் 31-ந் தேதி நடைபெற உள்ளது. இக்குழுவின் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டன. பொதுவாக இக்குழுவின் கூட்டங்கள் டெல்லியில் நடத்தப்பட்டு வந்தன.
அண்மையில் பெங்களூருவில் முதல் முறையாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 13-வது கூட்டம் திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் வரும் 31-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதனடிப்படையில் இந்த ஒழுங்காற்று கூட்டம் அடுத்த உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.