ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
108 திருப்பதியில் முக்கியமானது திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இங்கு சுற்றுலா பயணிகளும், ஆன்மிக பக்தர்களும் அதிகளவில் வந்து செல்வதுண்டு.
அவ்வாறு வரும் பக்தர்கள் செல்பி எடுத்தல், போட்டோ எடுத்தல், வரிசையில் நகராமல் செல்போன் பேசி மற்ற பக்தர்களுக்கு இடையூறு தருவது உள்ளிட்டவை சாதாரண நாட்களை காட்டிலும் பண்டிகை தினங்கள், கூட்ட நெரிசலின் போதும் இது போல் நடக்கிறது. இதனால் மற்ற பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கோயிலின் பாதுகாப்பு கருதியும் பிரகாரத்தினுள் செல்பி எடுப்பதை தடுக்கும் வகையிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செல்போன் எடுத்து செல்வதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதன்படி பக்தர்கள் செல்போன்களை ரூ 10 செலுத்தி கோயிலின் நுழைவாயில்களில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக பக்தர்கள் தங்கள் கருத்துகளை வரும் 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.