சென்சார் பூட்டு உடைப்பு..தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..திருவெறும்பூரில் பகீர் சம்பவம்
திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் நேதாஜி என்பவர் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேதாஜி திருச்சி சென்றிருந்த நிலையில் சென்சார் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் நேதாஜி. இவரது தம்பி தேவேந்திரன். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். தேவேந்திரனின் மகன் நிச்சயதார்த்த விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருச்சிக்கு வந்துவிட்டனர்.
நேதாஜியின் வீட்டிற்குள் யாரும் இல்லை என்பதை உணர்ந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் லாக்கரில் வைத்திருந்த 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, அதன்மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்களை பிடிப்பதற்காக டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேதாஜியின் வீட்டில் உள்ள பூட்டுக்கள் பற்றி நன்றாக விபரம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்ற சந்தேகம் காவல்துறையினரிடையே எழுந்துள்ளது. ஒரு சவரன் நகை 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் வீடுகளில் வைத்திருக்கும் நகைகள் திருடு போகும் சம்பவம் அதிகரித்து வருகிறது.