கேரள, கர்நாடக வெள்ளத்தைப் பார்வையிட்டாரே பிரதமர். தமிழகத்திற்கு வராதது ஏன்.. வேல்முருகன் கேள்வி
தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: கேரளா, கர்நாடகா வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர், வர்தா, கஜா புயல் பாதிப்பை பார்வையிட வராதது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் சேதமாகி விட்டிருக்கிறது. இதனால் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புயலால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்க முன்வந்தார்.
அதன்படி, கடந்த 21-ம் தேதியிலிருந்து 23-ம் தேதிவரை என 3 நாட்கள் அந்த பகுதிகளில் தங்கியிருந்து 2 கோடி ரூபாய்க்கும் மேல் நிவாரண உதவிகளை செய்தார்.
கடும் விமர்சனம்
தற்போது மீண்டும் திருச்சி மாவட்டத்தை பார்வையிட சென்றிருக்கிறார். அங்கே மணப்பாறை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் செய்தியாளர்களை வேல்முருகன் சந்தித்தார். அப்போது மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேரளா, ஆந்திரா
"டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. ஆகவே கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும். இது போன்ற புயலால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் எல்லாம் உடனடியாக சென்று நேரில் பார்வையிட்டார்கள்.
யாரும் வரவில்லை
உடனடியாக அந்த புயல் சேதத்துக்கு மத்திய அரசு நிதியையும் அளித்தார்கள். ஆனால் தமிழகத்தில் வர்தா, கஜா இப்படி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை பிரதமர் உள்ளிட்ட யாரும் பார்வையிட வரவில்லை. மத்திய குழு மட்டும் வந்துள்ளது.
வஞ்சிக்கிறது
அந்த குழுவினரும் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பார்த்து விட்டு செல்கின்றனர். இப்படியாக தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது." இவ்வாறு வேல்முருகன் கூறினார்.